DMK TVK: திமுகவினரை போன்று அரசு சொத்துகளை கொள்ளையடித்து, பொய்களை கண்மூடித்தனமாக பரப்பமாட்டோம் என தவெகவினர் கடுமையாக பதிலடி தந்து வருகின்றனர்.
DMK TVK: முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வண்டலூர் உள்ளிட்ட இரண்டு உயிரியல் பூங்காக்களில் பொதுமக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் ரஞ்சித்குமார் அறிவித்துள்ளார்.
உயிரியல் பூங்காக்களில் அனுமதி இலவசம்
வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ”முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, வண்டலூர் உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி வன உயிரியல் பூங்கா மற்றும் சேலம் குரும்பட்டி வன உயிரியல் பூங்கா ஆகியவற்றிற்கு வரும் பார்வையாளர்கள் ஜுன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கட்டணம் இன்றி உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முழு கட்டணத்தையும் எங்களது குடும்ப கட்டுப்பாட்டில் உள்ள வாழ்முனி நாயக்கர் குடும்ப அறக்கட்டளை செலுத்தும்” என அறிவித்தார். இதுபொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
யார் வீட்டு சொத்து? – திமுக குற்றச்சாட்டு
அமைச்சரின் முழு பேட்டியையும் காணாமல், ஊடகங்களில் வெளியான பாதி தகவல்களை மட்டுமே கண்டு, ரஞ்சித்குமாரின் அறிவிப்பினை திமுகவின் அதிகாரப்பூர்வ ஐடி விங் கண்டபடி வசைபாடியுள்ளது. இதுதொடர்பான பதிவில், “உயிரியல் பூங்காக்கள் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் அவர்களே? நேற்று ‘வெள்ளை அறிக்கை’ விட்டு கஜானாவில் காசில்லை என்று கதறிய நீங்கள், இன்று ‘இன்ஸ்டா அரசன்’ விஜய்யின் பிறந்தநாளுக்காக வண்டலூர் உள்ளிட்ட பூங்காக்களுக்கு 2 நாட்கள் இலவச அனுமதி எனப் பல்லிளிப்பது ஏன்? இந்த வருவாய் இழப்பை யார் ஈடுகட்டுவது? வாயில்லா ஜீவன்களின் உணவுக்கும், ஊழியர்கள் சம்பளத்துக்கும் யார் பொறுப்பு? முதல்வருக்குப் பிறந்தநாள் என்றால் உங்கள் கட்சி நிதியில காக்கா, அணிலுக்கு கேக் வெட்டி ஊட்டிவிடுங்கள். அதைவிட்டு மக்கள் வரிப்பணத்தில் கைவைக்க உங்களுக்கு என்ன தைரியம்? இந்த முதலமைச்சருக்கு ஒரு மண்ணும் தெரியாது என்ற துணிச்சலில் தான் அமைச்சர்களும், ‘Shadow CM’ம் சேர்ந்து தமிழ்நாட்டை இப்படிச் சூறையாடுகிறீர்களா?” என ஆவேசமாக பதிவிட்டுள்ளனர்.
”கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களா?”
திமுகவின் கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகளுக்கு தவெகவினர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். இதுதொடர்பான பதிவுகளில், “நாங்கள் என்ன கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களா, அரசு பணத்தை வாரி வீட்டிற்கு கொண்டு போக? கடும் நிதிச்சுமையில் கூட கடலில் பேனா கட்டுவோம் என மக்கள் பணத்தை கரைக்க முயன்ற அறிவாலயம் க்ரூப் அல்ல நாங்கள். 10 ஆயிரம் ரூபாய் மட்டும் தான் கையிருப்பு என பொய் சொல்லி டிஃபெண்டரில் உலா வரும் உங்கள் முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ., செய்யக்கூடிய வேலைகளை எல்லாம் எங்கள் தலையில் கட்டாதீர்கள். தமிழ்நாட்டிற்கு நாங்கள் தான் கல்வி அறிவை கொடுத்தோம் என கட்டுக்கதைகளை கூறும் எதிர்க்கட்சிகாரர்களுக்கு, அமைச்சரின் அறிவிப்பை முழுமையாக படிக்கும் அளவிற்கு கூட அறிவு இல்லையா? இல்லை, வன்மத்தை கொட்டியே ஆக வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக வந்து இந்த பதிவை வெளியிட்டீர்களா? ஊரே காரி துப்பியும் கூட உங்களது பொய் பதிவை நீக்காமல் இருப்பதிலேயே தெரிகிறது, தோல்வியில் இருந்து வெளியேற முடியாமல் என்ன மாதிரியான விஷ மனநிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை. ஏற்கனவே யாரோ ஒரு ஜான் ப்ரிட்டோவை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் என கூறி, வானிற்கும் பூமிக்கும் குதித்து மூக்குடைந்தது போதாதா? இப்படி இன்னும் எவ்வளவு பொய் மூட்டைகளை தான் அவிழ்த்து விடப்போகிறீர்கள்?ஆர்வக்கோளாறு ஐடி விங் என்று பெயரை மாற்றிக் கொள்ளுங்கள். இந்தக் கட்டணத்தை வனத்துறை அமைச்சர் தனது சொந்த செலவில் அரசாங்கத்திற்கு தனது அறக்கட்டளை மூலம் வழங்கப் போகிறார் என்ற தகவலை இப்போதாவது உள்வாங்கிக் கொள்ளுங்கள். திடீரென தமிழக மக்கள், வாயில்லா ஜீவன்கள் மற்றும் அரசு கஜானா மீதான உங்களது அக்கறை எங்களை கலங்கடிக்கச் செய்கிறது கொத்தடிமைகளே“ என தவெகவினர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.