அதிமுக-வில் எஸ்பி வேலுமணி சிவி சண்முகம் ஆதரவு எம்எல்ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் சிலர் தாவி வரும் சூழலில், 3 எம்எல்ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஆளுங்கட்சியாக தவெக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள நிலையில், எதிர்க்கட்சியாக திமுக அமைந்துள்ளது. தொடர்ந்து சறுக்கலைச் சந்தித்து வரும் அதிமுக இந்த தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவிய அதிருப்தி எம்எல்ஏ-க்கள்:
இந்த சூழலில், அதிமுக-விற்கு மிக கடுமையான சோதனைக்காலம் தற்போது உருவெடுத்துள்ளது. தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக எழுந்த விவகாரத்தில் கட்சிக்குள் ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தலைமையில் பெரும்பாலான எம்எல்ஏ-க்கள் ஒன்று கூடினர். இவர்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தனர்.
சிவி சண்முகத்தை மிகப்பெரிய அளவில் நம்பி இவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பினர். ஆனால், அமைச்சரவையில் இடம் அளிக்காமல் விஜய் அவர்களை தவிர்த்தார். அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து அதிமுக-வில் இருந்தால் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தரப்பு எம்எல்ஏ-க்கள் சிலர் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவியுள்ளனர்.
சிவி சண்முகத்தால் புலம்பல்:
அமைச்சரவையில் கண்டிப்பாக இடம் கிடைக்கும் என்றும், கிடைத்தால் மீண்டும் அதிகாரம் பெறலாம் என்று சிவி சண்முகம் அளித்த நம்பிக்கையால் எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் போன்ற முன்னாள் அமைச்சர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பினார்கள். ஆனால், தற்போது இது எதுவுமே அரங்கேறாத சூழலில் தங்களது கட்சிப் பதவியையும் அவர்கள் இழந்துள்ளனர். இன்று தாராபுரம், பெருந்துறை மற்றும் மதுராந்தகம் எம்எல்ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்துள்ளனர்.
சிவி சண்முகத்தை நம்பி இபிஎஸ்-க்கு எதிராக பொதுக்குழுவை கூட்ட முயற்சித்த நிலையில், தற்போது பொதுக்குழுவை கூட்டினாலும் அது எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே மாறும் என்று கருதப்படுகிறது. அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என்ற தகவல் உறுதியானது முதலே சிவி சண்முகம் நிருபர்கள் யாரையும் சந்திக்கவில்லை. மேலும், தனது கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி பக்கமே ஐக்கியமாகும் முடிவிற்கு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
என்ன முடிவு?
தற்போது எடப்பாடி பழனிசாமியே மீண்டும் பெரும்பான்மை அதிமுக எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் இருப்பதால் அவருக்கு எதிராக இருந்த எம்எல்ஏ-க்கள் தங்கள் கட்சி பதவியை பறிகொடுத்துள்ள நிலையில், அதை மீண்டு்ம் பெறுவதற்கு என்ன செய்யலாம்? என்ற ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சில எம்எல்ஏ-க்கள் தாராபுரம், பெருந்துறை மற்றும் மதுராந்தகம் எம்எல்ஏ-க்களைப் போல தங்களது பதவியை ராஜினாமா செய்யலாமா? என்ற யோசனையிலும் உள்ளனர். சிவி சண்முகத்தை நம்பி இந்தளவு செயல்பட்டதற்காகவும் புலம்பி வருகின்றனர். அதேசமயம், தனது பக்கம் வரும் எம்எல்ஏ-க்களை நிரந்தரமாக தக்க வைக்கவும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
தற்போது சிவி சண்முகம் மட்டுமே தனித்து விடப்பட்ட சூழலில் காணப்படுகிறார். இதனால், வரும் நாட்களில் அவர் என்ன முடிவு எடுப்பார்? அவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தனது நிலைப்பாட்டிலே உறுதியாக இருப்பாரா? அல்லது இபிஎஸ்- தலைமையை ஏற்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.