அமைச்சரவையில் இடம் கிடைக்காத நிலையில், சிவி சண்முகம் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பதில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சிப்பொறுப்பேற்று ஒரு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்சியிலும் அதிரடிகள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, அதிமுக-வில் தேர்தல் முடிவுகள் வந்தது முதலே தினமும் பரபரப்பாகவே காணப்பட்டு வருகிறது.
கனவை தகர்த்த விஜய்:
தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் இடம்பிடிக்கலாம் என்ற கனவையும் முதலமைச்சர் விஜய் தவிடுபொடியாக்கியுள்ளார். தவெக அரசின் ஆட்சியில் இடமில்லை என்பது உறுதியாகியுள்ள நிலையில், அடுத்து என்ன செய்வது என்று எடப்பாடி பழனிசாமி அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தவிப்பில் உள்ளனர்.
சிவி சண்முகத்தின் பேச்சைக் கேட்டு செயல்பட்டது மிகப்பெரிய தவறு என்று அவர்கள் வருத்தத்தில் இருப்பதாகவும், மீண்டும் எடப்பாடி பழனிசாமி பக்கம் செல்லவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்:
தனது சட்டமன்ற அதிமுக தலைவர் பதவியை தக்கவைக்கவும், பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து வராமல் இருக்கவும் அவர்களின் ஆதரவும் எடப்பாடி பழனிசாமிக்கும் தேவைப்படுகிறது. ஆனால், திமுக தயவுடன் ஆட்சியமைக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டு, பொதுக்குழுவை கூட்டி தனது பதவியை பறிக்க முயற்சித்தார் என்று சிவி சண்முகம் வைத்த பகிரங்கமான குற்றச்சாட்டால் அவரை மட்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி தயக்கம் காட்டி வருகிறார்.
என்ன செய்யப்போகிறார் சிவி சண்முகம்?
எஸ்பி வேலுமணியும் நேற்று அதிமுக-வில் எந்த பிளவும் இல்லை, எடப்பாடி பழனிசாமிதான் தங்களது பொதுச்செயலாளர் என்று பேட்டி அளித்துச் சென்றார். அப்போது சிவி சண்முகம் உடனிருக்கவில்லை. தான் நினைத்தது அரங்கேறாத நிலையில், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் சிவி சண்முகம் தடுமாறி வருகிறார். இதன் காரணமாகவே அவர் கடந்த 2 நாட்களாக எந்தவித பேட்டியும் அளிக்காமல் உள்ளார்.
சிவி சண்முகம் கட்சியின் உள்விவகாரங்களை பொதுவெளியில் பகிரங்கமாக போட்டு உடைத்ததே எடப்பாடி பழனிசாமி விடாப்பிடியாக இருப்பதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மேலும், எடப்பாடி பழனிசாமியின் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் அதிமுக இருப்பதாக குற்றம் சாட்டியதும், எடப்பாடி பழனிசாமியை தாங்களே பொதுச்செயலாளராக நியமித்தோம் என்று தெரிவித்ததும் இபிஎஸ்-ஸிற்கு மிகப்பெரிய ஆதங்கத்திற்கு உண்டாக்கியுள்ளது.
எடப்பாடி பழனிசாமியிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் கட்சியில் தனது பலத்தை சிவி சண்முகம் பெறுவாரா? அல்லது தனது அதிகாரத்தை நிலைநிறுத்த ஏதேனும் காய் நகர்த்துவாரா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிருப்தி எம்எல்ஏ-க்களின் மாவட்டங்களில் புதிய நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ள நிலையில், அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மீண்டும் தங்களது பதவியை பெறுவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.