பெரும்பான்மை இல்லாமல் தவெக ஆட்சியமைக்க முடியாமல் திணறும் சூழலில், திமுக – அதிமுக இணைந்து ஆட்சியமைக்க உள்ளதாக தொடர்ந்து தகவல் பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டை அரை நூற்றாண்டு காலமாக ஆட்சி செய்த திமுக, அதிமுக ஆகிய இரு கட்சியினரையும் வீழ்த்தி தனது முதல் தேர்தலிலே தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.
திணறும் தவெக:
தமிழக வெற்றிக் கழகம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆட்சியைப் பிடிக்க போதுமான பெரும்பான்மை இல்லாமல் தவெக அவதிப்பட்டு வருகிறது. ஆட்சியை பிடிக்க 118 எம்எல்ஏ-க்கள் தேவைப்படும் நிலையில், தவெக வசம் 108 எம்எல்ஏ-க்கள் மட்டுமே உள்ளனர். தவெக-விற்கு காங்கிரஸ் ஆதரவு தந்தும் தவெக-விற்கு 113 எம்எல்ஏ-க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது.
திமுக – அதிமுக கூட்டணியா?
இந்த சூழலில், யாரும் எதிர்பாராத புதிய திருப்பமாக தமிழ்நாட்டை மாறி, மாறி ஆண்ட திமுக-வும், அதிமுக-வும் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்காமல் தடுப்பதற்காக கூட்டணி அமைக்க உள்ளதாக பரபரப்பான தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. ஆனால், திமுக தரப்பிலோ அதிமுக தரப்பிலோ இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், பிரபலமான அரசியல் விமர்சகர்கள் பலரும் இந்த கருத்தை தொடர்ந்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த தேர்தலில் திமுக 59 இடங்களையும், அதிமுக 47 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இந்த இரு தொகுதிகளின் எண்ணிக்கையும் 106 ஆகும். அதேசமயம் திமுக கூட்டணியில் உள்ள விசிக 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் 2, தேமுதிக 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக கூட்டணியில் உள்ள பாமக 4, அமமுக 1, பாஜக 1 இடங்களை தஙகள் வசம் வைத்துள்ளனர்.
திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளின் வசமே 15 இடங்கள் உள்ளது. இதில் பாஜக-வை நீக்கினாலும் 14 இடங்கள் ஆகும். திமுக அதிமுக கூட்டணியுடன் அவர்களது கூட்டணியில் இடம்பிடித்த கட்சிகளின் ஆதரவும் கிடைத்தால் நிச்சயமாக ஆட்சியைக் கைப்பற்ற இயலும்.
புதிய வரலாறு:
திமுக-வை எதிர்த்து திமுக-வில் இருந்து பிரிந்து வந்த எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அண்ணா திமுக-வை தொடக்க காலத்திலே திமுக-வுடன் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவர் இறந்த பிறகும் இணைக்க முயற்சிகள் நடந்தது. ஆனால், அப்போது நடைபெறாத வரலாற்று நிகழ்வு விஜய்யை வீழ்த்துவதற்காக நடக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வியாகும்.
இப்படி ஒரு அரசியல் நிகழ்வு அரங்கேறினால் நிச்சயமாக இந்தியாவே திரும்பி பார்க்கும் நிகழ்வாக இது அமையும். அதேசமயம், இரண்டு கட்சிகளின் எதிர்காலமும் மிகப்பெரிய கேள்விக்குறியாகும். குறிப்பாக, அதிமுக-வின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறிவிடும். அப்படி நிகழ்ந்தால் விஜய் ஆட்சி அமைக்க இயலாமல் போனாலும் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.