தவெக ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசனை எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது விஜய் தலைமையிலான தவெக அரசு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியது. ஆளுங்கட்சியாக இருந்த நிலையில், எதிர்க்கட்சியாக மாறியது மட்டுமின்றி கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலினே தோற்றது திமுக-வினர் மத்தியில் ஆதங்கத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியது.
ஆட்சியைக் கவிழ்க்க பேரம்:
தவெக அரசு மீது தொடர்ந்து விமர்சனங்களை திமுக முன்வைத்து வரும் சூழலில், தவெக அரசை கவிழ்ப்பதற்காக அந்த கட்சியின் எம்எல்ஏ-க்களிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் பின்னணியில் செந்தில் பாலாஜி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. செந்தில் பாலாஜியின் சகோதரர் இந்த வழக்கில் முன்ஜாமின் கோரியதுடன் தலைமறைவாகவும் உள்ளார்.
கோபத்தின் உச்சியில் மு.க.ஸ்டாலின்:
இந்த விவகாரம் குறித்து அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகுந்த கோபம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால், தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த முயற்சி குறித்து அவருக்கே தெரியாமல் காய் நகர்த்தப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
மகன், மருமகனுக்கு வார்னிங்:
இதனால், தனது மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன் உள்ளிட்ட மிக மிக நெருக்கமானவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த ஆலோசனையில் இந்த சம்பவத்தால் அவர் மிக கோபத்துடன் அவர்களை எச்சரித்ததாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியையே கவிழ்க்க விரும்பாத தான், நேர்வழியிலே ஆட்சியைப் பிடிக்க விரும்புவதாகவும், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்குவதும், தவெக ஆட்சியை கவிழ்ப்பதும் திமுக-வின் வேலை இல்லை என்றும் திட்டவட்டமாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தான் லண்டனில் இருந்து திரும்பும் வரை தனக்குத் தெரியாமல் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது என்றும் அங்கிருந்த அனைவரையும் எச்சரித்துள்ளார்.
அதிருப்தி:
திமுக – அதிமுக கூட்டணி முயற்சி விவகாரத்தில் தொடக்கம் முதலே மு.க.ஸ்டாலினுக்கு உடன்பாடு இல்லாத சூழலில், அப்போது எடுக்கப்பட்ட முயற்சி வெளிவந்ததன் பின்னணியில் திமுக-விற்கு மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்கியது. அந்த விவகாரத்திலும் தனக்கு நெருக்கமான சிலர் மீது மு.க.ஸ்டாலின் ஆதங்கத்தில் உள்ளார்.
தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்கு 180 கோடி ரூபாய் அளவிற்கு பேரம் பேச சதித்திட்டம் தீட்டப்பட்டதாக தற்போதைய விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இதுவரை எந்த கருத்தையும் வெளியிடவில்லை. மேலும், தனது மகன் மற்றும் மருமகனுடன் நடத்திய ஆலோசனையில் யாருடைய அறிவுறுத்தலில் சில முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்பதையும் தான் அறிவேன் என்றும், இதுபோன்ற விபரீத முயற்சிகள் இனிமேல் இருக்கவே கூடாது என்றும் எச்சரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.