TVK ADMK: சனிக்கிழமை தோறும் விஜய் அண்ணா கட்சியினர் ஆள்பிடித்துச் செல்வதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
TVK ADMK: கவர்ச்சியால் தவெகவிற்கு கிடைத்த வெற்றி நிரந்தரமானது இல்லை என, அதிமுகவில் இருந்து வெளியேறுபவர்கள் உணர வேண்டும் என ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
தவெகவில் இணைந்த அதிமுகவினர்..
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்தது. இதைதொடர்ந்து பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக அதிமுகவைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து ஆளுங்கட்சியில் இணைந்தனர். தொடர்ந்து பல்வேறு முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.பிக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் விஜய் கட்சியில் இணைந்து வருகின்றனர். அதன்படி இன்றும் அதிமுகவைச் சேர்ந்த வனரோஜா, பச்சைமால், புவனேஷ்வரி மற்றும் பாலகங்கா உள்ளிட்ட பலரும் தவெகவில் இணைந்தனர். இதனை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நரசூஸ் காஃபி போன்று விளம்பரம்
இதுதொடர்பாக ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், “விஜய் அண்ணா அவர்கள் இரண்டு ஆண்டுகளிலேயே கட்சியை தொடங்கி மக்களின் நம்பிக்கையை பெற்று 35 சதவிகித வாக்குகளை பெற்றுவிட்டார் என பாராட்டு மழை பொழிகின்றனர். ஆனால், மறுபுறத்தில் 65 சதவிகிதத்தினர் விஜயின் தவெகவிற்கு எதிராக வாக்களித்துள்ளார்களே அதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டாமா? ஆஹா, ஒஹோ பேஸ் பேஸ் என நரசூஸ் காஃபியை மாதிரி தவெகவில் இணைய எல்லாரும் ஓடி வருகிறார்கள். வாசலில் காத்துடக் கிடக்கிறார்கள். ஆனால், விஜய் அண்ணாவை மட்டும் யாராலும் பார்க்க முடியாது. இந்த ஜனநாயகத்தில் இதுபோன்ற ஒரு துர்பாக்கிய நிலை ஏற்பட்டதை நாம் பார்த்தது உண்டா? கருத்து வேறுபாடு அல்லது கவலை கொள்வதற்கான மருந்தாக நாம் ஒரு முடிவு எடுப்பதை தினந்தோறும் பார்க்கும் காட்சியாக உள்ளது. அதிமுகவிற்கோ, தமிழக அரசியல் வரலாற்றிற்கோ ஒது ஒன்றும் புதியது அல்ல.
அதிமுகவினர் உணர்வது எப்போது?
ஆனால் அதை கையாள்கிற முறையும், எதிர்கொள்கிற முறையும் தான் வேதனையாக உள்ளது. சொல்லிக்கொண்டே போனால் வேதனையின் உச்சம் ஆயிரம் இருக்கிறது. ஆனால் இரண்டு ஆண்டுகளிலேயே 35 சதவிகித மக்களின் ஆதரவு, 5 சதவிகித மக்களின் எதிர்ப்பை விஜய் பெற்று இருக்கிறார் என்பது தேர்தலில் வாக்காளர்கள் அளித்த தீர்ப்பு. ஏதோ ஒரு வசீகரத்தில் அவர் பெற்ற வெற்றியை நிரந்தரம் என சொல்லிக்கொள்கின்றனர். அவர் தனது முகமூடியாக வைத்துள்ள வசீகரமும், கவர்ச்சியும் நிரந்தரம் அல்ல என்பதை எப்போது நாம் புரிந்துகொள்ள போகிறோம்?
விஜய் அண்ணாவிற்கு தோல்வி
கவர்ச்சி மற்றும் வசீகத்தில் வந்ததன் காரணமாக இந்த ஒரு மாதத்திலேயே, விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் விஜய் அண்ணா அரசு தோல்வி கண்டுள்ளது. விவசாயிகள் போராட்டம், தடையில்லா மின்சாரம் வழங்குவதில் தோல்வி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் விஜய் அண்ணா அரசு தோல்வி கண்டுள்ளது. சட்ட-ஒழுங்கை காப்பதிலும், போதை பொருள் நடமாட்டத்தை குறைப்பதிலும் விஜய் அண்ணா அரசு தோல்வி. இதனால் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. எனவே வசீகரம் மற்றும் கவர்ச்சியால் வென்று ஒரு மாதத்திலேயே தவெக விஜய் அண்ணா அரசு தோல்வி நிலையில் இருக்கின்றது.
ஆள்பிடிக்கும் தவெக
விஜய் அண்ணா, விஜய் அண்ணா சிலரை பல காலம் ஏமாற்றலாம். பலரை சில காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள். சனிக்கிழமைதோறும் ஆள்பிடிக்கும் குறிப்பாக அதிமுகவில் வலைவீசி ஆள் பிடிக்கின்றனர். அதில் சிக்கும் மீனகளாக இருக்கும் அதிமுக விசுவாச தொண்டர்களே உங்கள் நிலை பரிதாபமாக இருக்கிறது. வேடன் வலையை விரிப்பது மீனை வாழவைப்பதற்கு அல்ல. புழுவை தூண்டிலில் போட்டு பிடிக்கப்படும் மீன் சாப்பிடுவதற்கானது மட்டுமே என்பதை அதிமுகவினர் புரிந்துகொள்ள வேண்டும். அதை புரிந்துகொண்டால் தான் சனிக்கிழமைதோறும் நடைபெறும் ஆள்பிடிக்கும் இந்த அசிங்கமான வேலை முற்றுபெறும்.