Raghava Lawrence Politics : நான் அரசியலில் ஈடுபடுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. பணம் சம்பாதிப்பதிலோ அல்லது பதவியை அடைவதிலோ எனக்கு எந்த நோக்கமும் இருந்ததில்லை என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் களம்
தமிழகத்தில் நாள் தோறும் புதிய புதிய அரசியல் மாற்றங்கள் உருவாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக- அதிமுக என இரு கட்சிகளும் தமிழகத்தில் ஆட்சி அமைத்து வந்த நிலையில், இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக உருவான தவெக ஆட்சியை பிடித்து அசத்தியுள்ளது. இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தவெகவில் இணைந்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் இது தொடர்பாக எந்த வித தகவலையும் லாரன்ஸ் உறுதி செய்யாத நிலையில், கடந்த வாரம் தனது அடுத்தக்கட்ட திட்டம் தொடர்பாக இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக கூறியிருந்தார்.
அரசியலில் ராகவா லாரன்ஸ்
இந்த நிலையில் லாரன்ஸ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எனது கடமையை உண்மையுடனும் நேர்மையுடனும் செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம் என தெரிவித்துள்ள ராகவா லாரன்ஸ், நான் ஒருநாளும் அரசியலுக்குள் வருவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணமோ, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையோ, எந்தப் பதவியையும் தேட வேண்டும் என்ற விருப்பமோ எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நான் நம்பிக்கை வைத்த ஒருவரும், எனக்கு நெருக்கமான ஒருவரும் அரசியலுக்கு வந்தால், அவர்களுக்கு துணையாக நின்று, அவர்களுடன் இணைந்து, நான் தனிப்பட்ட முறையில் செய்து வந்த சமூகப் பணிகளைவிட பெரிய அளவில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே என் ஒரே எண்ணமாக இருந்தது. ஆனால், இன்று ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் என்னை அரசியலில் களமிறங்க வேண்டிய ஒரு நிலைக்கு கொண்டு வந்துள்ளன.
10 மணிக்கு முக்கிய அறிவிப்பு
அந்த வகையில் இன்று காலை 10 மணிக்கு நான் வெளியிடவுள்ள காணொளியில், அரசியல் குறித்த எனது பார்வை, அது என் வாழ்க்கையில் எப்படி வந்தது, என் தாயாரின் அரசியல் குறித்த எண்ணங்கள், மேலும் என் பயணத்தை வடிவமைத்த சில முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்து, என் மனதில் உள்ளதை எந்த மறைப்பும் இல்லாமல், முழு நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பகிர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்தக் காணொளியை இறுதி வரை பார்த்து, உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ள ராகவா லாரன்ஸ், நான் எடுத்து வைக்கும் இந்த முக்கியமான பயணத்தில், உங்கள் ஆதரவும், அறிவுரைகளும், ஆசீர்வாதங்களும் எனக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என அந்த பதிவில் லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.