பிரேமலதாவின் எதிர்பார்ப்பு தான் என்ன?

59 0

6 சீட் தருவதாகச் சொல்லும் அறிவாலயமா… அல்லது 7 சீட் தருவதாகச் சொல்லும் கமலாலயமா என்று முடிவெடுக்க முடியாத நிலையில், ‘நாங்களும் ஆட்டத்தில் இருக்கிறோம்’ என்பதைக் காட்ட விருப்ப மனு அறிவிப்பை வெளியிட்டு அதிரடி கிளப்பியிருக்கிறார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா.

“ஜனவரி 9-ம் தேதி கடலூர் மாநாட்டில், யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம்” என டிசம்பர் மாதமே ட்ரைலர் ஓட்டினார் பிரேமலதா. இன்னமும் அதே ட்ரைலர் தான் தேதி மாறி மாறி ஓடிக் கொண்டே இருக்கிறதே தவிர, தேமுதிக எந்தப் பக்கம் ‘சாயப் போகிறது’ என்ற சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தபாடில்லை.

இதனால், “பிரேமலதா ‘வழக்கம் போல்’ இரண்டு பக்கமும் பேசிக் கொண்டிருக்கிறார்” என்ற விமர்சனங்கள் தேமுதிக-வை சுழன்றடிக்க ஆரம்பித்துள்ளன. ஆனாலும், தங்களைச் சுற்றிப் பின்னப்படும் ‘பேர அரசியல்’ பேச்சுக்களுக்கு கடுமையாக எதிர்வினை ஆற்றிக் கொண்டே கூட்டணிப் பேச்சுவார்த்தையை இழுத்துக் கொண்டே இருக்கிறார் பிரேமலதா.

கடந்த மாதம் பிரதமர் மோடி தமிழகம் வந்த சமயத்தில், பாஜக தரப்பில் பியூஷ் கோயல் தேமுதிக-விடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏதும் எட்டப்படாததால், வண்டி அப்படியே யூ-டர்ன் அடித்து அறிவாலயம் பக்கம் திரும்பலாம் எனப் பேச்சுக்கள் கிளம்பின. அதுவும் நடக்காத நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்ற தேமுதிக பொருளாளர் சுதீஷை, நயினார் நாகேந்திரன் வளைத்துப் பிடித்துப் பேசியது, ‘கூட்டணி முடிவாகிவிட்டது’ என்கிற பிம்பத்தை உருவாக்கியது. இருப்பினும் பேச்சுவார்த்தை ‘எதிர்பார்த்தபடி’ ஓடி அடையாததால் கட்சியினரை உற்சாகப்படுத்த விருப்ப மனு வைபவத்தைத் தொடங்கி இருக்கிறார் பிரேமலதா.

இதுகுறித்து பேசிய அறிவாலய வட்டாரங்கள், “மதிமுக-வை விட தேமுதிக-வுக்கு பல தொகுதிகளில் இன்னும் செல்வாக்கு இருக்கிறது என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சிலர் தெரிவித்தனர். இதன் பிறகே, தேமுதிக-விடம் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் எ.வ.வேலு முதல்வரின் கண்ணசைவில் களமிறங்கினார்.

அப்போது பிரேமலதா தரப்பு, 15 தொகுதிகள், ராஜ்ய சபா சீட் மற்றும் தேர்தல் செலவு என பட்டியலை நீளமாக நீட்டியது. இதற்கு முதல்வர் சம்மதிக்கவில்லை. பிறகு ஐசரி கணேஷ் ரூட்டைப் பிடித்து சுதீஷ் பேசியபோதும், ‘6 தொகுதிகள் தான், தேர்தல் செலவை வேண்டுமானால் பார்த்துக் கொள்ளலாம்’ என திமுக தரப்பில் உறுதியாகச் சொல்லப்பட்டது. இதை ஏற்பதில் பிரேமலதா தயக்கம் காட்டுவதால் தான் இழுபறி நீடிக்கிறது” என்றனர்.

என்டிஏ வட்டாரத்தில் விசாரித்த போது, “அதிமுக தரப்பிலிருந்து எஸ்.பி.வேலுமணி, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் மூலமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், 30 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்டது தேமுதிக. இதற்கு பழனிசாமி சம்மதிக்கவில்லை. இதேபோல் பாஜக-விடம், 30 இடங்கள் மற்றும் மத்திய அமைச்சர் பதவி என டிமாண்டை ஏற்றியது தேமுதிக.

ஆனால் அவர்களும், ‘7 சீட் தரலாம். தேர்தல் செலவுக்கு வேண்டுமானால் திமுக-வை விட கூடுதலாக கவனிக்கலாம்’ என்று சொன்னதாகத் தெரிகிறது. இனியும் காலம் கடத்த முடியாது என்பதால் இந்த உடன்படிக்கைக்கு பிரேமலதா சம்மதித்து விடுவார் என்றே நினைக்கிறோம். அதற்கான சமிக்ஞைகள் தெரிந்ததால் தான், ‘தேமுதிக நம் கூட்டணிக்குத்தான் வரும்’ என பழனிசாமியும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசியிருக்கிறார்” என்றனர்.

தேமுதிக தரப்பிலோ, “கேப்டன் காலத்தில் இருந்த செல்வாக்கு தேமுதிக-வுக்கு இப்போது இல்லை என அனைவரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஆனால், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விஜய பிரபாகரன் வாங்கிய வாக்குகள் எங்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது. தற்போதைய சூழலில், பலமான கூட்டணி அமைத்து தேமுதிக மீண்டும் சட்டப் பேரவைக்குள் செல்ல வேண்டும். அப்போது தான் சரிந்து வரும் வாக்கு வங்கியை மீட்கவும் கட்சியைத் தூக்கி நிறுத்தவும் முடியும். அதற்கேற்ப அண்ணியார் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு” என்றனர்.

2009 மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு கிடைத்த சுமார் 10% வாக்குகளை முன்வைத்து, இப்போது தங்களுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்கிறது தேமுதிக. ஆனால், அதன் பிறகான தேர்தல்களில் தேமுதிக-வின் வாக்கு வங்கி சரிந்து கொண்டே வந்திருப்பதைச் சுட்டிக்காட்டும் திமுக-வும் அதிமுக-வும் ‘உங்களுக்கு இவ்வளவு தான் இப்போது செல்வாக்கு’ என்று சொல்லிவைத்தாற் போல் முடிவெடுத்து ஒற்றை இலக்கத்திலேயே தொகுதிகளை ஒதுக்க முன்வருகின்றன. இவர்களுக்கு மாற்றாக தவெக பக்கம் போகலாம் என்றால் அங்கே தாங்கள் எதிர்பார்க்கும் ‘அனைத்தும்’ கிடைத்துவிடாது என்பதால் திராவிடக் கட்சிகளை தவிர்த்து தேமுதிக-வுக்கு வேறு திக்கில்லை என்பதே இப்போதைய நிலவரம்

Related Post

‘மார்ச் 1ல் முக்கிய முடிவு – மாநாடு’ திமுக மாஸ்டர் ப்ளான்..!

Posted by - February 9, 2026 0
’கே.என்.நேரு தலைமையில் ஏ.வே.வேலு உள்ளிட்டோரை உள்ளடக்கிய தொகுதி பங்கீட்டு குழுவை திமுக அமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது’ சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தன்னுடைய  பிரச்சாரத்தை தீவிரமாக…

“ஆட்சியில் பங்கு குறித்து இனி யாரும் பேசமாட்டார்கள்” – ஆர்.எஸ்.பாரதி உறுதி!

Posted by - February 14, 2026 0
சென்னை: “கூட்டணி ஆட்சி குறித்து நாளை முதல் யாரும் பேசமாட்டார்கள். விஜய்யை நாங்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து…

நாடு முழுவதும் குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை மக்களிடம் உள்ளது – அண்ணாமலை

Posted by - November 24, 2025 0
நாடு முழுவதும் குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை மக்களிடம் உள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற இலங்கை…

சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி தலைமையில் சென்னையில் போராட்டம்!

Posted by - December 17, 2025 0
பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *