பட்டையடித்த மோடி, கடுப்பாகி ஒபிஎஸ் எடுத்த புது ரூட் – தமிழக பிள்ளைகள் பாவம்.. ஆன் தி வே டூ விஜய்?

101 0

மத்திய பாஜக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்து இருப்பது, தமிழ்நாடு அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி ஓ.பன்னீர் செல்வத்துடனான சந்திப்பை தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.

கழற்றிவிட்ட பாஜக..கடுப்பான ஓபிஎஸ்..

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டாலும், பாஜகவின் ஆதரவால் நிச்சயம் ஒருநாள் மீண்டும் கட்சியில் இணைந்துவிடலாம் என ஓபிஎஸ் நம்பி வந்தார். ஆனால், இன்று எடப்பாடி பழனிசாமி கொடுக்கும் நெருக்கடியால், ஓபிஎஸ்-ஐ முற்றிலுமாகவே கழற்றிவிட பாஜக தயாராகிவிட்டதாகவே தெரிகிறது.  அண்மையில் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என, ஓபிஎஸ் கடிதம் எழுதி இருந்தார். ஜி.கே. வாசன் உள்ளிட்ட தலைவர்களுக்கு எல்லாம் அனுமதி கிடைத்தது. ஆனால், மூன்று முறை தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ்-ற்கு பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தான், மத்திய அரசை கண்டித்து ஓ. பன்னீர்செல்வம் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

முடங்கிப்போன பணிகள்:

இதுதொடர்பான அறிக்கையில், “ மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை பயிலும் குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்தல் போன்ற பல்வேறு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சமக்ரா சிக்ஷா திட்டம் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் மத்திய அரசின் பங்கு அறுபது விழுக்காடு எனவும், மாநில அரசின் பங்கு நாற்பது விழுக்காடு எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை பின்பற்றாததன் காரணமாக 2024-2025 ஆம் ஆண்டு சம்கரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய 2,151 கோடி ரூபாய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமக்ரா சிக்ஷா திட்டத்தின் நிதியை நம்பி கிட்டத்தட்ட 65 லட்சம் மாணவ, மாணவியர் தனியார் பள்ளிகளில் கல்வி பெற்று வருவதோடு, 6 லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்களும் பயனடைந்து வருகிறார்கள். இந்தத் திட்டத்தின்கீழான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக தனியார் பள்ளிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதோடு மட்டுமல்லாமல், அரசு சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சி, பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மைப் பணி உள்ளிட்ட பல பணிகள் முடங்கிப் போயுள்ளன.

மத்திய அரசுக்கு கண்டனம்:

மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இந்த ஆண்டு 25 விழுக்காடு மாணவ, மாணவியரை தனியார் பள்ளிகளில் சேர்க்க இயலாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல்,கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தற்போது தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியரின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய அரசின் நிபந்தனைகளை மாநில அரசு ஏற்காதது என்பது மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான பிரச்சனை. இந்தக் காரணத்தைச் சுட்டிக்காட்டி நிதியை விடுவிக்காமல் இருப்பது அப்பாவி ஏழை எளிய மாணவ, மாணவியரின் கல்வியையும், ஆசிரியர்களையும் பாதிக்கும் செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கல்வி உரிமைச் சட்டத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது.

சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் நிதியை விடுவிக்காதது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் ஏழையெளிய மாணவ, மாணவியரின் கல்வி மற்றும் ஆசிரியர்களை பாதிக்கும் செயல் என்பதைக் கருத்தில் கொண்டு, நிறுத்தி வைக்கப்பட்ட நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என ஓ. பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விஜய் கூட்டணியில் ஓபிஎஸ்?

பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவாகவே கடந்த சில ஆண்டுகளாக ஓபிஎஸ் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். ஆனால், தற்போது அவர்களுக்கு எதிராகவே வெளியிட்டுள்ள அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இனியும் பாஜகவை நம்பி இருந்தால் தனது அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும் என ஓபிஎஸ் நம்புவதாக கூறப்படுகிறது. எண்டிஏ கூட்டணியில் தனக்கான வாய்ப்புகள் குறைவு அப்படியே நீடித்தாலும் மதிப்பு இருக்காது என கருதுகிறாராம். அதன் காரணமாகவே பல மாதங்களாக நீடிக்கும் பிரச்னைக்கு இப்போது திடீரென கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதோடு, மதுரையில் நடைபெற உள்ள மாநாட்டில் புதிய கட்சியை தொடங்கி, விஜயுடன் கூட்டணி அமைக்கவும் திட்டமிட்டு வருகிறாராம். காரணம், திமுக மற்றும் பாஜக இரண்டு கூட்டணியிலும் வாய்ப்பு இல்லாததால், அவருக்கு உள்ள ஒரே வாய்ப்பு விஜய் மட்டுமே. அவரும் பாஜக கூட்டணியில் இடம்பெறமாட்டோம் என தெளிவாக அறிவித்துவிட்டார். இதன் காரணமாக பாஜக நட்பில் இருந்து விலகியதை உறுதிப்படுத்தவே, இந்த கண்டன அறிக்கை என்றும் கூறப்படுகிறது.

அதேநேரம், தனக்கு மாற்று வழிகளும் உள்ளன என்பதை காட்டி, பாஜக கூட்டணிக்குள் தனக்கு முக்கியத்துவத்தை பெறவும், ஓபிஎஸ் இந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கலாம் என அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

Related Post

திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு – இது தான் காரணமா.?

Posted by - November 4, 2025 0
சர்ச்சை பேச்சு காரணமாக திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமும்…

ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி – சட்டபேரவையில் என்ன பிரச்னை?

Posted by - January 20, 2026 0
 தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் உரையை வாசிக்காமலேயே தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆளுநர் ஆர். என் ரவி வெளிநடப்பு செய்தார். TN Assembly 2026: தமிழ்நாடு சட்டமன்றத்தில்…

“ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது” – பிரதமர் மோடி

Posted by - January 23, 2026 0
“ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…

‘மார்ச் 1ல் முக்கிய முடிவு – மாநாடு’ திமுக மாஸ்டர் ப்ளான்..!

Posted by - February 9, 2026 0
’கே.என்.நேரு தலைமையில் ஏ.வே.வேலு உள்ளிட்டோரை உள்ளடக்கிய தொகுதி பங்கீட்டு குழுவை திமுக அமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது’ சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தன்னுடைய  பிரச்சாரத்தை தீவிரமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *