’விஜயை வைத்து புதுச்சேரியில் முதல்வர் ஆவதுதான் புஸ்ஸி ஆனந்தின் நீண்ட நாள் திட்டம் என்பதை விஜய் மெல்ல, மெல்ல உணரத் தொடங்கிவிட்டார்’தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தனக்கு தானே செய்துக்கொள்ளும் விளம்பரம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. கட்சியின் தலைவரான விஜயை முன்னிலைப்படுத்துவதைக் காட்டிலும் தன்னுடைய முகத்தை மக்கள் மத்தியில் கொண்டுச் சேர்ப்பதையே வாடிக்கையாக புஸ்ஸி ஆனந்த் வைத்திருக்கிறார் என்ற குற்றஞ்சாட்டு தொடர்ந்து எழுந்துவந்த நிலையில், இன்று நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுக விழாவில், புஸ்ஸி ஆனந்த் முகத்தை பார்த்துக் கூட விஜய் பேசவில்லை.
‘மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்’ என்ற ஸ்டிக்கரை வீடு, வீடாக சென்று த.வெ.கவினர் ஒட்டி வந்தனர். அதில், விஜயின் புகைப்படத்தோடு, புஸ்ஸி ஆனந்த் புகைப்படமும் இடம்பெற்றது. பேனர், போஸ்டர்கள், கட்சி சார்பில் கொடுக்கும் துண்டு சீட்டுகள் என எதை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்தாலும் விஜய் புகைப்படம் இருக்கிறதோ இல்லையோ கட்டாயம் புஸ்ஸி ஆனந்த் புகைப்படம் இருக்க வேண்டும் என்பது அறிவிக்கப்படாத விதியாகவே அந்த கட்சியில் தொடர்ந்து வந்தது. அப்படி புஸ்ஸி ஆனந்த் பெயரையோ, புகைப்படத்தையோ போடாத நிர்வாகிகள் கட்டம், கட்டி ஓரங்கட்டப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், விஜயை முதல்வர் வேட்பாளர் என்று விளம்பரப்படுத்தும் ஸ்டிக்கரிலும் தன்னுடைய புகைப்படத்தை போட்டு ஊர், தெரு, வீடு என பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்ட நிலையில், இதனை கட்சியின் நிர்வாகிகள் சிலர் விஜயின் கவனத்திற்கு கொண்டுச் சென்றிருக்கின்றனர். அதன்பிறகு, விஜயின் உத்தரவின்படி, புஸ்ஸி ஆனந்த புகைப்படம் தவிர்க்கப்பட்டது.
முதல்வர் கனவில் புஸ்ஸி
தமிழ்நாட்டிற்கு விஜயை முதல்வர் ஆக்குவேன் என்று சபதமெடுத்துவிட்டு, விஜயின் முகத்தை வைத்து புதுச்சேரியில் முதல்வர் ஆக வேண்டும் என்ற லட்சிய வேட்கையுடன் புஸ்ஸி ஆனந்த் செயல்படுவதாகவும், தமிழ்நாடுதான் கஷ்டம், புதுச்சேரி எனக்கு ரொம்ப ஈசி என்று அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய விவகாரம் விஜயின் காதுகளுக்கு எட்டி, புஸ்ஸி மீது கடும் கோபத்தில் விஜய் இருந்ததாகவும் கூறப்பட்டது.
புஸ்ஸியை திரும்பி பார்க்காத விஜய்
அந்த கோபம் இன்று நடந்த நிகழ்ச்சியில் அப்பட்டமாக வெளிப்பட்டது. மேடைக்கு கீழே போடப்பட்டிருந்த நாற்காலியில் விஜயின் ஒரு பக்கத்தில் ஆதவ் அர்ஜூனாவும், இன்னொரு பக்கத்தில் புஸ்ஸி ஆனந்தும் அமர்ந்திருந்தனர். கழுத்து வலிக்குமே என்பதற்காக கூட விஜய் புஸ்ஸி பக்கம் திரும்பி பார்க்கவே இல்லை. புஸ்ஸி ஆனந்துடன் பேசவும் இல்லை. ஆனால், ஆதவ் அர்ஜூனாவுடன் சகஜமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தார். பின்னர், செயலியை தொடங்கி வைக்க விஜய் மேடையேறியபோது, புஸ்ஸி ஆனந்தை கீழே இருக்கும்படி இரண்டு முறை சைகை காட்டுவார். ஆனால், அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் அவர் மேடையேறிவிடுவார். இதன்மூலம், விஜய் புஸ்ஸி ஆனந்த் மீது கடும் வெறுப்பில் உள்ளது பட்டவர்த்தமனாக தெரியவந்துள்ளது.
புஸ்ஸி ஆனந்துக்கு நெருப்பு விடும் வார் ரூம்
விஜய் குறித்த வீடியோவில் கூட, பல புஸ்ஸி ஆதரவாளர்கள் விஜயை சரமாரியாக தாக்கி கமெண்ட் இடுவது, புஸ்ஸி இல்லையென்றால் விஜய் ஒன்றுமில்லை என்பது மாதிரியான பதிவுகளை போடுவது என தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போது கூட விஜய் சொல்வதை எங்க தல கேட்கல பாத்தியா ? தில்ல பார்த்தியா? என்று நெருப்பு விட புஸ்ஸிக்கு ஒரு டீமே வேலை பார்ப்பதாக தகவல் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். அதேமாதிரி, விஜய் பொதுச்செயலாளர் மீதுள்ள மரியாதையால் அவர் தடுக்கி விழந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அப்படி சைகை காட்டினார் என்றும் புஸ்ஸிக்கு ஆதரவாக அவரது டீம் உருட்டத் தொடங்குவார்கள் என்பதும் விஜய்க்கு மெல்லத் தெரியத் தொடங்கியிருக்கிறது.
புஸ்ஸி ஆனந்த் பற்றி விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு நேர்காணலில் பேசியிருப்பார். அதுதான் உண்மையான புஸ்ஸியின் முகம் என்பதை தற்போது விஜய் உணரத் தொடங்கியிருக்கிறார் என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்