ஓபிஎஸ் என்பது ஒரு முடிந்து போன கதை என்றும், ஒட்டுமொத்த இயக்கமே எடப்பாடியார் பின்னால் உள்ளது என தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் இழப்பீட்டு தொகையும், நிவாரணமும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று அவர் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :- கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அதிகப்படியான மழைப்பொழிவு, நூற்றாண்டு காலம் இல்லாத அளவு தூத்துக்குடி மாவட்டம் சந்தித்தது குறிப்பாக காயல்பட்டினத்தில் 95 சென்டிமீட்டர் மழை பதிவானது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக 50 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்தது என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன் விளைவாக மாவட்டத்தின் பல இடங்களில் அதிகமான கண்மாய்கள் உடைப்பு, சாலைகள் சிதலமடைந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் தீவு போல துண்டிக்கப்பட்டு மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.
கோடநாடு என்பது தனிப்பட்ட சொத்து அம்மா அவர்கள் அம்மா அவர்களோடு இணைந்து சேர்ந்து வாங்கப்பட்ட டிரஸ்டின் மூலமாக அதில் அவர்கள் உறுப்பினராக இருக்கின்ற காரணத்தினால் அங்கே சென்று மேம்பாட்டு பணிகளை செய்ய அவர்களுக்கு உரிமை உள்ளது. அம்மாவின் மேல் உள்ள விசுவாசத்தின் காரணமாக இப்பணியை செய்தால் நல்லது தான். அம்மாவிற்கு யார் பெருமை சேர்த்தாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.
ஓபிஎஸ் என்பது ஒரு முடிந்து போன கதை. நீதிமன்றத்தில் அனைத்து தீர்ப்புகளும் வந்தாகிவிட்டது. ஒட்டுமொத்த இயக்கமே எடப்பாடியார் பின்னால் உள்ளது. 100 சதவீத தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பின்னால் இருக்கின்ற நேரத்தில் யாரை வைத்து அவர் (ops) அரசியல் செய்யப் போகிறார், என்றார்.