பாஜகவுடன் கூட்டணி என்பதை முதல்வர் ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன கவலை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்
எந்த கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது எனவும் திமுகவுக்கு பயம் வந்துவிட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணி:
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியை அதிமுக பாஜக அமைத்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். ஆனால் மதுரை முருகன் மாநாட்டில் அண்ணா மற்றும் பெரியார் குறித்தான சர்ச்சை வீடியோ குறித்து எடப்பாடி பழனிச்சாமி கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார்
எடப்பாடி பேச்சு:
இந்த நிலையில் உளூந்துர்பேட்டையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர் ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அதிமுகவின் வெற்றிக்கு இங்கு குவிந்திருக்கும் சிப்பாய்களைப் பாருங்கள். இங்குள்ள ஒவ்வொருவரும் 25 வாக்குகளை அதிமுக வேட்பாளருக்குப் பெற்று கொடுக்க வேண்டும். நமக்குக் கூட்டணி பலமானதாக அமையும். யாரும் கவலைப்பட வேண்டாம். .
திமுகவுக்கு கவலை:
பாஜகவுடன் கூட்டணி என்பதை முதல்வர் ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன கவலை. ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது வாக்குகள் சிதறாமல் இருக்க, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றவே கூட்டணி வைத்துள்ளோம்.
தனிபெரும்பான்மையுடன் ஆட்சி:
அதிமுக அழிந்துவிடும் என ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். தொண்டர்களால் உருவாக்கப்பட்ட. கட்சி அதிமுக. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்.
”எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது:”
அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்று திமுக கூட்டணிக் கட்சியினர் கூறுகிறார்கள். எந்த கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது. ஒவ்வொரு தொண்டரின் உடலிலும் ஓடுவது அதிமுகவின் ரத்தம். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் கூட, கருணாநிதியால் அதிமுகவை வீழ்த்த முடியவில்லை. அத்தனை முயற்சிகளும் தூள் தூளாக்கப்பட்டது. ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது என்றார்.
’பொய் வாக்குறுதி”
2011ல் எதிர்க்கட்சி வரிசையில் கூட திமுகவால் அமர முடியவில்லை அதிமுகவை விமர்சனம் திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை 2021ல் மக்களை ஏமாற்றுவதற்காக 500க்கும் மேலான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்கள். பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் திமுக, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், சிலிண்டர் மானியம், கல்விக் கடன் என்று எந்த வாக்குறுதியையும் திமுக இதுவரை நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி ஆவேசமாக தெரிவித்திருந்தார்