Governor RN ravi | தமிழக சட்டசபையில் நடைபெற்ற நிகழ்வுகள் தற்போது பேசும் பொருளாகியுள்ளது. இந்த நிலையில் ஆளுநர் உரை குறித்து ஆளுநர் தரப்பு விளக்கமளித்துள்ளது.
அரசாங்கத்தை பெரிதும் புகழ்ந்த வார்த்தைகளையே ஆளுநர் தவிர்த்ததாக ஆளுநர் மாளிகை வட்டாரம் விளக்கமளித்துள்ளது. மேலும் அவை விதிகளை மீறவில்லை என்றும் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையின்போது குறிப்பிட்ட வார்த்தைகளை தவிர்த்து மற்றும் கூடுதல் வார்த்தைகள் சேர்த்தது குறித்து ஆளுநர் தரப்பு விளக்கமளித்துள்ளது. அதில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தது அவை மரபை மீறிய செயல் என்றும், ஆளுநர் பேச்சை அவை குறிப்பிலிருந்து நீக்குவது என்பது தீவிர விவாத பொருள் எனவும் தெரிவித்துள்ளது. மரபு மீறி முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தது சபை விதிக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக முதலீட்டை தமிழகம் ஈர்த்தது என்பது ஆளுநரால் சுட்டிக்காட்டப்பட்ட பிழை என்றும் தொழில் முதலீடு குறித்த விவரம் மிகைப்படுத்தப்பட்ட செய்தி என்பதால் தவிர்ப்பு என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
செய்தி தாள்களில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு தொடர்பான செய்திகள் நாள்தோறும் வருகின்றன. தமிழ்நாடு அமைதியின் சொர்க்கம் என்பது எதார்த்தம் அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டது மாநிலத்தின் முயற்சியால் மட்டுமே நடந்தது போல் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த விளக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.