இந்தியாவின் செயல்பாட்டால் அவர்களுடனான உறவில் எரிச்சல் ஏற்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
USA On INDIA: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்கா மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
”எரிச்சலூட்டும் இந்தியா”
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதோடு, ரஷ்யாவிடம் இருந்து ராணுவ ஆயுதங்கள் மற்றும் எரிபொருட்களை வாங்குவதற்காக கூடுதல் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால், இந்திய ஏற்றுமதியாளர்கள் கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் தான், அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது, “ரஷ்யாவிடமிருந்து இந்தியா எரிபொருளை வாங்குவது அமெரிக்கா உடனான உறவில் ஒரு எரிச்சலான புள்ளியாக இருப்பதாக”பேசியுள்ளார்.
ட்ரம்ப் வருத்தமா?
மலிவு விலையில் ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் இந்தியா எரிபொருளை வாங்குவது ட்ரம்பை வருத்தமடைய செய்துள்ளதா? என்ற கேள்விக்கு ”சர்வதேச வர்த்தகத்தில் இந்திய ஒரு நட்பு நாடு. எங்களின் கூட்டாளியும் கூட. அதேநேரம் வெளியுறவுக் கொள்கையில் எல்லா விஷயங்களிலும் அனைத்து நேரத்திலும் இருநாடுகளும் 100 சதவிகிதம் ஒத்துப்போவதில்லை” என மார்கோ ரூபியோ விளக்கமளித்துள்ளார்.
”ரஷ்யாவிற்கு உதவும் இந்தியா”
தொடர்ந்து பேசுகையில், “இந்தியாவிற்கு மிகப்பெரிய எரிசக்தி தேவைகள் உள்ளன, அதில் எண்ணெய், நிலக்கரி, எரிவாயு மற்றும் ஒவ்வொரு நாட்டையும் போலவே அதன் பொருளாதாரத்தை ஆற்றுவதற்குத் தேவையான பொருட்களை வாங்கும் திறன் அடங்கும். அதன்படி, ரஷ்யாவிடமிருந்து இருந்து வாங்குகிறது. உலக நாடுகளால் விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதார தடைகள் காரணமாக, மலிவு விலையில் ரஷ்யா கச்சா எண்ணெயை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவின் இண்ட நடவடிக்கை துரதிர்ஷ்டவசமாக, உக்ரைன் உடனான ரஷ்ய போர் முயற்சியைத் தக்கவைக்க உதவுகிறது. இது இந்தியாவுடனான எங்கள் உறவில் நிச்சயமாக எரிச்சலூட்டும் ஒரு புள்ளியாகும். அதேநேரம், எரிச்சலூட்டும் ஒரே புள்ளியும் அல்ல” என்று ரூபியோ தெரிவித்துள்ளார்.
”போரை ஊக்குவிக்கும் இந்தியா”
தொடர்ந்து பேசுகையில், “அதிபர் ட்ரம்ப் வெளிப்படுத்துவது மிகவும் தெளிவான விரக்தியாகும். சந்தையில் பல எண்ணெய் விற்பனையாளர்கள் இருந்தாலுமே, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடர்கிறது. இது ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு நிதியளிக்க உதவுகிறது மற்றும் உக்ரைனில் இந்தப் போர் தொடர அனுமதிக்கிறது” என்று ரூபியோ குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவின் வர்த்தக நண்பன் அமெரிக்கா:
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா திகழ்கிறது. 2024-25 நிதியாணிடில் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக்ம் 131.84 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் இந்த வர்த்தகத்தை 500 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த இருநாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி மொபைல் போன்கள், மருந்துகள், ஜவுளி மற்றும் ரத்தினக் கற்கள் ஆகிய துறைகளை உள்ளடக்கி 87 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளன. இந்நிலையில் இந்திய பொருட்கள் மீதான கூடுதல் வரி விதிக்கும் ட்ரம்பின் முடிவு, உள்நாட்டு ஏற்றுமதி திறனை கடுமையாக பாதிக்கும் என கருதப்படுகிறது.