புலம்பெயர்ந்தவர்களை தமிழ்நாட்டு வாக்காளர்களாக அங்கீகரிப்பது சட்டவிரோதமானது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த பிகார் மாநிலத்தவர்கள், தமிழ்நாட்டு வாக்காளர்களாக, இங்கேயே வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
பிகாரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வாக்காளர் திருத்தத்தில், சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதில், ஆறரை லட்சம் வாக்காளர்கள் தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்ததாகவும், அவர்கள் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவார்கள் என்றும் தகவல் வெளியானது. இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
அதாவது, அரசியலமைப்பு சட்டப்படி இந்தியாவின் எந்தப் பகுதியிலும், ஒரு குடிமகனால் வாக்காளராக மாற முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த கணக்கெடுப்பும் எடுக்காத நிலையில், பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் ஆறரை லட்சம் பேர் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்வார்கள் என்று கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
அதே சமயம், பிகாரைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் வசித்துவந்தால், அவர்கள் இங்கேயே வாக்காளர் அட்டை பெற்று வாக்களிக்க முடியும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப்பணிகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில், தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.முன்னதாக, புலம்பெயர்ந்தவர்களை தமிழ்நாட்டு வாக்காளர்களாக அங்கீகரிப்பது சட்டவிரோதமானது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டு வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான அரசைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் மிகப்பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தும் என்றும் கவலை தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் தனது அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்து மாநிலங்களின் தேர்தல் தன்மை மற்றும் முறைகளை மாற்ற முயற்சி செய்வதாகவும், இதற்கு எதிராக அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் போராட வேண்டும் என்றும் ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.