- முதலமைச்சர் காப்பீடு திட்டம்
- ரூ.30 லட்சம் பெறுவது எப்படி?
- அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்த அப்டேட்
Tamil Nadu CM Health Insurance : தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் பயனாளியாக இருப்பவர்கள் ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும். இந்த திட்ட பயனாளிகளுக்கு மேல் சிகிச்சைக்கு கூடுதல் நிதி தேவைப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் இதுதொடர்பாக சிறப்பு மனு எழுதி முதலமைச்சருக்கு மனு அளித்தால் ரூ.30 லட்சம் வரை நிதியுதவி கிடைக்கும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். எனவே, முதலமைச்சர் காப்பீடு அட்டை பெறுவது எப்படி, தேவையான ஆவணங்கள் என்ன, எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்…
முதலமைச்சர் காப்பீடு திட்டம்
1முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைகள், டயலஸிஸ், புற்றுநோய் சிகிச்சை, மாரடைப்பு சிகிச்சை, கர்ப்பப்பை கட்டிகள் தொடர்பான சிகிச்சை, விபத்து எலும்பு முறிவு சிகிச்சை உட்பட பல சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-க்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை அவசியம்.
பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய யோஜனா திட்டம்
இதேபோல் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய யோஜனா திட்டம் செயல்பட்டு வருகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் பயனாளிகளும் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். இந்த இரண்டு திட்டத்தையும் இணைத்து ஒரு குடும்பம் ஐந்து வருடத்திற்கு 10 இலட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வருடத்திற்கும் சிகிச்சைக்கான மருத்துவ பட்டியல், சிகிச்சை முறைகள், தொடர் சிகிச்சை வழிமுறைகள், பரிசோதனை முறைகள், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் போன்றவற்றை திருத்தப்பட்டு வெளியிடப்படுகிறது. விவசாயிகள், ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள் சிறிய சிகிச்சை செய்வதற்கு தனியார் மருத்துவமனைகளை நாடும்போது முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அடையாள அட்டையினை வழங்கி கட்டணமின்றி சிகிச்சை பெற முடியும்.
காப்பீடு அட்டை பெறுவது எப்படி?
பொதுமக்கள் ரேஷன் கார்டு நகல், ஏதேனும் ஒரு குடும்ப உறுப்பினரின் ஆதார் நகல், வருமான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு எடுத்துச்சென்று இந்த இரண்டு காப்பீடு திட்டங்களுக்கும் விண்ணப்பித்து காப்பீடு அட்டை பெற்றுக்கொள்ளவும்.இப்போது நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமிலேயே இந்த காப்பீடு அட்டைகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.
ரூ.30 லட்சம் பெறுவது எப்படி?
திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சைகள் மட்டுமே இலவசமாக கிடைக்கும் என்றாலும், இதுதொடர்பாக முதலமைச்சருக்கு மனு எழுதிக் கொடுத்தால் ரூ.30 லட்சம் வரையிலான சிகிச்சைகளுக்கு காப்பீடு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.