ஜூலை 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு, இந்த அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப் படியை உயர்த்தி, முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதன்படி, 55 சதவீதமாக இருந்த அகவிலைப் படி, 58 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு, இந்த அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழ்நாட்டு மக்கள் நலனில் அன்பும் அக்கறையும் கொண்டு, பல சீரிய முன்னோடி நலத் திட்டங்களைத் தீட்டி தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகின்றது. மக்களுக்காக வகுக்கப்படும் பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டுவதிலும். அத்திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் களப்பணியாற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்.
58 சதவீதமாக உயர்வு
அத்தமைய அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் 01.07.2025 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அகவிலைப் படிக்கு இணையாக உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார். இதனால் தற்போது 55 சதவீதமாக உள்ள அக விலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 01.07.2025 முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
ஆண்டுக்கு ரூ.1,829 கோடி கூடுதல் செலவு
இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள் பயன்பெறுவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,829 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கரை ஆண்டு காலமாக கூறப்பட்டு வரும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் என்ன ஆகின? தேர்தல் நெருங்கும் சூழலில், இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதா? என்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் குரல்கள் எழுந்து வருகின்றன.