அரசுக்கு அழுத்தம் தருகின்ற வகையில் வலுவான போராட்டத்தினை உடனடியாக அறிவித்து இந்த தொகையினை துரிதமாக பெற கடுமையான போராட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம்.
அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட 10% CPS தொகையினை வட்டியுடன் ஊழியர்கள் பணி ஓய்வு பெறும்போது வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த வேண்டும் என்று ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்களுக்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கடிதம் அனுப்பி உள்ளது.
அந்தக் கடிதத்தில் அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் கூறி உள்ளதாவது:
தற்போது தமிழக அரசால் 03- 01- 2026 அன்று அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும் என்ற நிலையில் வரவேற்க தகுந்ததாக இருந்தாலும் ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்பட்ட 10% CPS தொகை மிக அதிக அளவில் உள்ளது.
ஊழியர்களுக்கு தராமல் அரசே வைத்துக்கொள்வதா?
குறிப்பாக, கல்லூரி பேராசிரியர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்பட்ட 10% CPS தொகையானது ரூபாய் 75 லட்சம் முதல் ரூபாய் 1 கோடி வரை அரசின் இருப்பில் உள்ளது. எனவே ஊழியர்கள் செலுத்திய இவ்வளவு பெரிய தொகையை ஊழியர்களுக்குத் தராமல் தமிழக அரசு வைத்துக் கொள்வதை தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் ஏற்க மறுக்கிறது.
கடந்த 23 ஆண்டுகளாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் வரை அரசு கல்லூரி ஆசிரியர்கள் முழுமையாக போராட்டக் குணத்துடன் பங்கேற்று மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்பதை தாங்கள் அனைவரும் அறிந்ததே.
வட்டியுடன் 10 சதவீதம் சிபிஎஸ் தொகை
எனவே, ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இதனை தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பிடிக்கப்பட்ட 10% CPS தொகையினை வட்டியுடன் ஊழியர்கள் பணி ஓய்வு பெறும்போது வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த வேண்டும்.
அவ்வாறு கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் இதற்காக அரசுக்கு அழுத்தம் தருகின்ற வகையில் வலுவான போராட்டத்தினை உடனடியாக அறிவித்து இந்த தொகையினை துரிதமாக பெற கடுமையான போராட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் பி.டேவிட் லிவிங்ஸ்டன் தெரிவித்துள்ளார்.