தேர்தல் நெருங்க நெருங்க ஆளுங்கட்சி மீதான புகார்களை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது அதிமுக, அந்த வகையில் திமுக அமைச்சர்கள் மீதான புகார்கள் தொடர்பாக முக்கிய ஆதாரங்களோடு இன்று டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி
தமிழக தேர்தல்- அதிமுகவின் புதிய வியூகம்
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிலும் முன் கூட்டியே தேர்தல் தேதியை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஏற்ப அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது வரை 4 முனை போட்டி தமிழகத்தில் உறுதியாகியுள்ளது. இதில் திமுக– அதிமுக இடையிலான போட்டியால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதில் முதல்கட்டமாக திமுக அமைச்சர்கள் மீது அதிமுக– பாஜக கூட்டணி குறிவைத்துள்ளது. திமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தேடி தேடி எடுத்துள்ளது அதிமுக தலைமை, அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஊழல் புகார்கள் தொடர்பான பட்டியலை தயார் செய்துள்ளது.
அமைச்சர்கள் மீதான புகார்- தேடி எடுக்கும் அதிமுக
நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தமிழக அரசின் பல்வேறு துறைகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான பட்டியலை வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 56 மாதங்களாக வெளிப்படை தன்மை இல்லாமல் கார்ப்பரேட் நிறுவனம் போல் திமுக அரசு செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். கோடிக்கணக்கில் கொள்ளையடித்து தமிழ்நாட்டை மிகப் பெரிய கடன் சுமையில் திமுக அரசு தள்ளியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆளுநரிடம் ஆதாரங்களை கொடுத்த இபிஎஸ்
அந்த வகையில் பின்வரும் துறைகளில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது:
- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை – ₹64,000 கோடி
- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ராஜ் துறை – ₹60,000 கோடி
- நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை – ₹60,000 கோடி
- மின்சாரத் துறை – ₹55,000 கோடி
- மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை – ₹50,000 கோடி
- பதிவுத் துறை – ₹20,000 கோடி
- நெடுஞ்சாலைத் துறை – ₹20,000 கோடி
- நீர்வளத் துறை – ₹17,000 கோடி
- பெருநகர சென்னை மாநகராட்சி – ₹10,000 கோடி
- தொழில் துறை – ₹8,000 கோடி
- பள்ளிக் கல்வித் துறை – ₹5,000 கோடி
- சமூக நலத் துறை – ₹5,000 கோடி
- வேளாண்மைத் துறை – ₹5,000 கோடி
- சுகாதாரத் துறை – ₹4,000 கோடி
- உயர்கல்வித் துறை – ₹1,500 கோடி
- இந்து சமய அறநிலையத் துறை – ₹1,000 கோடி
- ஆதிதிராவிடர் நலத்துறை – ₹1,000 கோடி
- சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை – ₹750 கோடி
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை – ₹500 கோடி
- சிறைத் துறை – ₹500 கோடி
- சுற்றுலாத் துறை – ₹250 கோடி
- பால்வள மேம்பாட்டுத் துறை – ₹250 கோடி
இந்த ₹4 லட்சம் கோடி ஊழல் புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையிலான சிறப்பு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் அதிமுக முறைப்படி வலியுறுத்தியுள்ளது. “தமிழக மக்களுக்குத் தூய்மையான நிர்வாகம் கிடைக்க வேண்டும். பொதுப்பணத்தைப் பட்டப்பகலில் கொள்ளையடிப்பது தண்டிக்கப்படாமல் போகக்கூடாது,” என்று அதிமுக உறுதியுடன் தெரிவித்துள்ளது.
இந்த பரபரப்பான நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் அனைவரும் இன்று மாலை டெல்லி செல்கின்றனர். திமுக அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நேற்று ஆளுநரிடம் வழங்கிய புகார் மனுவை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய பைல்களுடன் இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்
திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 4 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் செய்திருப்பதாக ஆதாரங்களுடன் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளித்திருந்தார். அந்த ஆதாரங்களை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகார் மீது விரைவில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.