கொல்லத்தில் ஒரு தாயும், மகளும் ராஜன் பாபுவை சந்திக்க சென்றிருக்கின்றனர். அந்த சிறுமிக்கு பேய் பிடித்திருப்பதாகவும், அதனை ஓட்ட வேண்டும் எனவும் தாய் கூற, ஜோதிடர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
கேரளாவில் பேய் ஓட்டுவதாக கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சாமியாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள புதூர் பகுதியை அடுத்து வேந்தர் என்ற ஊரைச் சேர்ந்தவர் ராஜன் பாபு என்ற முராரி தந்திரி. 52 வயதான இவர் ஜோதிடம் பார்த்து வந்துள்ளார். அவரைக் காண தினமும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வருகை தருவது வழக்கமாகும். இப்படியான நிலையில் சமூக வலைத்தளங்களில் இந்த முராரி தந்திரி ஆக்டிவாக இருப்பது வழக்கம். முராரி ஜோதிஷாலயம் என்ற முகநூல் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்களை வெளிட்டு அந்த மாநிலம் முழுக்க பிரபலமாகியுள்ளார். தன்னிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கு அவர்கள் தேவை என்ன என்பதை அறிந்து ஜோதிடம் சொல்லி, ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் ராஜன் பாபு பணம் பறித்தும் வந்துள்ளார்.
இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தாயும், மகளும் ராஜன் பாபுவை சந்திக்க சென்றிருக்கின்றனர். அந்த சிறுமிக்கு பேய் பிடித்திருப்பதாகவும், அதனை ஓட்ட வேண்டும் எனவும் தாய் கூற, ஜோதிடர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன்படி வேந்தரில் உள்ள தனது வீட்டில் சிறுமிக்கு பேயோட்டும் சடங்குகளை ராஜன் பாபு நடத்தியுள்ளார். தான் சிறுமியுடன் தனியாக நேரம் செலவிட விரும்புவதாகவும், அதனால் நீங்கள் சிறிது நேரம் வெளியே இருக்கும்படி தாயாரிடம் அவர் கூறியுள்ளார்.
அதன்படி தாய் வெளியே இருக்கவும், அறைக்கதவை மூடிய ராஜன் பாபு அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். வெளியே வந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக மகளை அழைத்துக் கொண்டு காவல்துறையை நாடினார். அவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த ராஜன் பாபுவை தேடினர். அவரோ சிறுமி விவகாரத்தில் தன் வீட்டின் முன்னால் பலரும் வந்து போராட்டம் நடத்துவதைக் கண்டு ஒரு விடுதியில் தங்கியிருந்தார். அவரை தேடி சென்று கைது செய்த போலீசார் பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்டம் என பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனிடையே குளக்கட பஞ்சாயத்து முன்னாள் துணைத் தலைவர் ஆர். ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது, ராஜன் பாபு இதற்கு முன்னால் ஒரு ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது மூத்த ஜோதிடர் ஒருவரிடமிருந்து ஜோதிடம் கற்றுக்கொண்டு அதை தொழில் ரீதியாக ஏற்றுக்கொண்டார். ஜோதிடராக மாறுவதற்கு முன்பு அவர் முராரி என்று அழைக்கப்பட்டார். அவருக்கு எதிராக நாங்கள் கேள்விப்பட்ட முதல் புகார் இது என தெரிவித்துள்ளார்.