விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டமன்ற தேர்தலில் தங்களது மாவட்டச் செயலாளர்கள் பலருக்கும் போட்டியிட வாய்ப்பு மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது தமிழக சட்டமன்ற தேர்தல். இந்த தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அரசியல் கட்சி தமிழக வெற்றிக் கழகம். தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகராக உலா வரும் விஜய் போட்டியிடும் முதல் தேர்தல் என்பதால் இந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
புதியவர்களுக்கே முக்கியத்துவம்:
தமிழக வெற்றிக் கழகத்தினருடன் இதுவரை யாரும் கூட்டணி வைக்காத நிலையில், 234 தொகுதிகளிலும் அவர்களே போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. விஜய்யின் ஆரம்பகாலம் முதலே அவர்களது திரைப்படங்களை கொண்டாடி, அவரை உச்சநட்சத்திரமாக உயர்த்தியதில் அவரது ரசிகர்களின் பங்களிப்பு மிகப்பெரியதாக உள்ளது. விஜய்யின் தவெக-வின் மாவட்டச் செயலாளர்களாகவும் அவர்களே உள்ளனர்.
விஜய் மக்கள் இயக்கம் வரை பல்வேறு பணிகளையும் அவர்களே மேற்கொண்டு வந்த நிலையில், விஜய் கட்சி தொடங்கிய பிறகு செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், அருண்ராஜ், சிடி நிர்மல்குமார் என பலரும் கட்சியில் இணைந்து முக்கிய நிர்வாகிகளாக உருவெடுத்துள்ளனர்.
உழைத்தவர்களுக்கு சீட் இல்லை:
இந்த நிலையில், இந்த தேர்தலில் பல தொகுதிகளிலும் விஜய்யின் ரசிகர் மன்றத்திற்காகவும், விஜய்யின் மக்கள் இயக்கத்திற்காகவும் உழைத்த பலருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடையாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் 3 மட்டுமே விஜய்யின் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் மிகப்பெரிய பலமாக கருதப்படும் செங்கோட்டையன் கோபிச்செட்டிப்பாளையத்திலும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் கொங்கு மண்டலத்திலும் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அந்த பகுதியில் பல வருடமாக விஜய்யின் ரசிகர் மன்றம், மக்கள் இயக்கத்திற்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
அதிமுக-வில் இருந்து தவெக-வில் இணைந்த ஜேசிடி பிரபாகருக்கு அம்பத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ராஜ்மோகன் பெரம்பலூரிலும், அருண்ராஜ் திருச்செங்கோட்டிலும் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் மட்டுமின்றி பெலிக்ஸ், போன்ற புதியவர்களுக்கும் கட்சியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஆதங்கம்:
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய்யைத் தவிர மற்ற பெரிய முகங்கள் யாருமில்லை. அரசியல் அனுபவம் கொண்டவராக செங்கோட்டையன் மட்டுமே உள்ளார். இதனால், கட்சியின் முக்கிய நிர்வாகிகளாக கருதப்படும் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் போன்ற முகங்களுக்கும் வாய்ப்பு வழங்குவது அவசியம் என்று தவெக ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்த தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களாக இருப்பவர்கள் இந்த தேர்தலில் சீட்டை எதிர்பார்க்காதீர்கள். தளபதிக்காக உழையுங்கள் என்று தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம், வேறு கட்சியில் இருந்து வந்தவர்களுக்காக சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக விஜய்க்காக உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டுள்ளதாக சிலர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தவெக தங்களது வேட்பாளர்கள் பட்டியல் தேர்வையும் தீவிரமாக தயாரித்து வருகிறது.