ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வரும் மாணிக்கம் தாகூரால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது அரசியல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என பெரிய பட்டாளமே உள்ளனர்.
இடையூறு செய்யும் மாணிக்கம் தாகூர்:
இந்த நிலையில், கூட்டணியில் சில கட்சிகள் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் எனும் கோரிக்கையை முன்வைத்து வரும் நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறது. ஆட்சியில் பங்கு ஏற்றுக்கொள்ளவே ஏற்றுக்கொள்ளாத திமுக-விற்கு, காங்கிரஸ் எம்பி மாணிக்கம்தாகூர் தொடர்ந்து தனது பதிவுகளால் இடையூறு அளித்து வருகிறார்.
அல்லறை சில்லரை ஐடி விங் என்று திமுக ஆதரவாளர்களை மறைமுகமாக தாக்கியதுடன், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். காங்கிரஸ் நிர்வாகிகளை வசைபாடிய திமுக மாவட்டச் செயலாளர் மீது ஏன்? இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
அப்செட்டில் மு.க.ஸ்டாலின்:
மாணிக்கம் தாகூரின் இந்த செயலால் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால் அதற்கு முன்பு திமுக-வை கடுமையாக விமர்சித்துப் பேசிய மாணிக்கம் தாகூர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
திமுக-வின் கோரிக்கையை ஏற்று மாணிக்கம்தாகூர் மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்குமா? அல்லது மாணிக்கம் தாகூருக்காக திமுக-வுடன் மோதுமா? அல்லது திமுக – காங்கிரஸ் சமரசம் ஆகுமா? என்பதை இன்னும் சில நாட்களில் அறிந்து கொள்ளலாம்.
இரட்டை நிலைப்பாட்டில் காங்கிரஸ்:
ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை போன்ற முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் திமுக கூட்டணியிலே நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், சில நிர்வாகிகள் தவெக கூட்டணிக்குச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
கூட்டணிப் பேச்சுவார்த்தை வரும் 22ம் தேதி தொடங்க உள்ள நிலையில், காங்கிரசின் சில முக்கிய தலைவர்களும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை திமுக தலைமையிடம் வலியுறுத்தி வருவதுடன் அதிக தொகுதிகளை ஒதுக்கவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை செல்வப்பெருந்தகை நேரில் சந்தித்து பேசியுள்ளார். ராகுல் காந்தியுடன் நேரடியாக திமுக தலைமை சார்பாக கனிமொழி பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியில் பங்கு என்பது சாத்தியமே இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆனாலும், மாணிக்கம் தாகூர் போன்ற சில நிர்வாகிகள் ஆட்சியில் பங்கு கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர என்பது குறிப்பிடத்தக்கது.