திமுக மாணவரணி செயலாளர் பதவியிலிருந்து ராஜிவ் காந்தியை நீக்கி, கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
DMK Rajiv Gandhi: திமுக மாணவரணி செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜிவ் காந்தி, கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜிவ் காந்தி பதவி நீக்கம்:
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர் அணிச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தி அவர்களை. அப்பொறுப்பிலிருந்து விடுவித்து. கழக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்” என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு அறிக்கையில், “திமுக மாணவர் அணி துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் ஜெ. வீரமணி என்பவர் கழக மாணவர் அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்” என துரைமுருகன் அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுகவின் முக்கிய பிரிவான மாணவரணியின் செயலாளர் மாற்றப்பட்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கோவை தெற்கை குறிவைத்த ராஜிவ் காந்தி..
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த உடனேயே மிகக் குறுகிய காலகட்டத்திலேயே, கட்சியின் மிக முக்கிய பிரிவுகளில் ஒன்றான மாணவரணியின் செயலாளராக நியமிக்கப்பட்டார். பல்வேறு தொலைக்காட்சி விவாத மேடைகள் மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சியிலும் பங்கேற்று, திமுக சார்பில் களமாடி வந்தார். சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக களப்பணிகளை முழு வீச்சில் செய்து வந்த அவர், அண்மையில் திமுக சார்பில் அந்த தொகுதியில் போட்டியிட விருப்பமனுவும் அளித்தார். கட்சி தலைமைக்கும் நெருக்கமாக இருப்பதால், அவர் கோரிய தொகுதியில் நிச்சயம் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான், மாணவரணி செயலாளர் எனும் வலுவான பொறுப்பில் இருந்து, கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜிவ் காந்திக்கு டம்மி போஸ்ட் ஏன்?
திமுகவை பொறுத்தவரை ஒரு அணியின் செயலாளர் என்பது மிகவும் முக்கியமான மற்றும் அதிகாரமிக்க பதவியாக கருதப்படுகிறது. அத்தகைய பதவியிலிருந்து தான் ராஜிவ் காந்தி தற்போது அகற்றப்பட்டுள்ளார். கடந்த 2021ல் திமுகவில் இணைந்ததுமே ஊடக பிரிவு இணைச் செயலாளர் பதவியை பெற்ற அவர், தொடர்ந்து திமுக மாணவரணி தலைவராக நியமிக்கப்பட்டார். ஊடகங்களில் அவரது தீவிரமான செயல்பாடு மற்றும் கூர்மையான பேச்சாற்றலை கண்டு வியந்த திமுக தலைமை, 2016 மற்றும் 2021 ஆகிய இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்ற எம்.எல்.ஏவான சி. வி. எம். பி. எழிலரசனிடமிருந்து மாணவரணி செயலாளர் பதவியை பறித்து, கடந்த 2025ம் ஆண்டு ராஜிவ் காந்திக்கு வழங்கியது. அந்த பதவியை பெற்று ஓராண்டான மறுநாளே, அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதே தற்போது அறிவாலய வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
ராஜிவ் காந்தி மீது நடவடிக்கை – காரணம் என்ன?
பொதுவாகவே செயல்பாடுகள் மிகவும் மந்தமாக இருந்தாலோ, உட்கட்சி பூசலில் ஈடுபட்டாலோ அல்லது பெரும் சர்ச்சையில் சிக்கினால் மட்டுமே திமுகவில் முக்கிய பொறுப்புகள் வகிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். செயல்பாடு அடிப்படையில் ராஜிவ் காந்தி தீவிரமாகவே களமாடி வருகிறார். அப்படி இருந்தும் இந்த பதவி பறிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது, ஒருவேளை மூத்த தலைவர்கள் உடன் மோதல் அல்லது இதுவரை வெளிவராத சர்ச்சை ஏதேனிலும் சிக்கி இருப்பாரோ? என்ற சந்தேகத்தை உடன்பிறப்புகளிடையே ஏற்படுத்தியுள்ளது.