காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் மிக கடுமையாக பேசி வருகிறார். அவரின் வார்த்தைகள் எல்லாம் கூட்டணியில் நெருடலை உண்டாக்குவது போல இருக்கிறது என வைகோ தெரிவித்ததற்கு மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் உட்கட்சியின் மோதல் பற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தமிழக காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் மதிமுக சார்பில் மண்டல அளவிலான தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நேற்று (பிப்ரவரி 19) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை புறநகர் ஆகிய மாவட்டங்கள் சார்பாக ரூ.1.38 கோடி நிதி அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் சார்பில் ரூ.52 லட்சம் வழங்கப்பட்டது.
கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை
இந்நிகழ்ச்சிக்குப் பின் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அரசியலில் மதிமுக நேர்மையாக இருக்கிறார்கள் என நினைத்து தான் மக்கள் தேர்தல் நிதி தருகிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக பேச்சுவார்த்தைக் குழு அமைத்து திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்பு தான் போட்டியிடும் தொகுதிகள் பற்றி தெரிய வரும். மேலும் இந்த தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும். நாங்கள் இடம் பெற்றுள்ள திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும். கூட்டணியில் தேமுதிக இணைந்தது தித்திப்பான செய்தி. அதேசமயம் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி பற்றி விமர்சனம்
தொடர்ந்து பேசிய அவரிடம் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பது பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, “காங்கிரஸ் கட்சியின் எம்.பி., மாணிக்கம் தாகூர் மிக கடுமையாக பேசி வருகிறார். அவரின் வார்த்தைகள் எல்லாம் கூட்டணியில் நெருடலை உண்டாக்குவது போல இருக்கிறது. நாங்களும் திருப்பி அடிப்போம் என்று மாணிக்கம் தாகூர் சொன்னது ராமநாதபுரத்தில் 2 பேர் சண்டையிட்டால் எப்படி பேசுவார்களோ அப்படி உள்ளது. இதனை அக்கட்சியில் உள்ளவர்களே கண்டித்துள்ளனர்.
அக்கட்சி தொடங்கிய நாள் முதல் கலகக்குரல் எழுப்புவது அவர்களில் வழக்கமாக இருந்து வருகிறது. உட்கட்சி விவகாரத்தில் காங்கிரஸின் கதர் சட்டைகள் எல்லாம் கிழிக்கப்பட்டிருக்கும். இது ஒன்றும் புதிது கிடையாது. காங்கிரஸ் கட்சியினர் ஒரே நேரத்தில் 9 குரல் கொடுப்பார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” என வைகோ தெரிவித்தார்.
தலைமை சொன்ன ஒத்த வார்தைக்கு மரியாதை
இதற்கு பதிலடி கொடுத்துள்ள மாணிக்கம் தாகூர் எம்.பி., தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், “ கூட்டணி குறித்து பேச கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொன்ன ஒத்த வார்தைக்கு மரியாதை கொடுத்து இதை தாண்டி பொறுமையுடன் கடந்து போறேன். பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே” என தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.