ஒன்றிணைந்தால்தான் வெல்ல முடியும் என்று நான் சொன்னது தவறா? இன்று கட்சியின் நிலை எப்படி இருக்கிறது? நாடாளுமன்றத் தேர்தலில் டெபாசிட் இழந்தது அதிமுக- ஓபிஎஸ்.
கட்சி விதியை மாற்றும் உரிமை யாருக்கு இருக்கிறது? எம்ஜிஆர் கைப்பட எழுதி வைத்த விதியை மாற்றினார்கள். என்று ஓ.பன்னீர்செல்வம் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களைகட்டி வருகிறது. இதையொட்டி கூட்டணியை கட்சிகள் மும்முரமாக முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில், தமிழக அரசியல் களத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஆகவும் முன்னாள் முதல்வராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படாமல், தனித்து விடப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தேனி, போடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
’’ஒன்றிணைந்தால்தான் வெல்ல முடியும் என்று நான் சொன்னது தவறா? இன்று கட்சியின் நிலை எப்படி இருக்கிறது? நாடாளுமன்றத் தேர்தலில் டெபாசிட் இழந்தது அதிமுக. கட்சி விதியை மாற்றும் உரிமை யாருக்கு இருக்கிறது? எம்ஜிஆர் கைப்பட எழுதி வைத்த விதியை மாற்றினார்கள்.
எனக்கு ஏன் இந்த நிலை?
எனக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்று எல்லோருக்கும் தெரியும். தர்ம யுத்தம் செய்தபோது எம்ஜிஆருக்கு நூற்றாண்டு வயது. அரசின் சார்பில் அப்போது விழா கொண்டாடப்பட்டது. தர்ம யுத்தம் மேற்கொண்டபோது அனைவரும் ஆதரவு அளித்தனர். கொங்கு மண்டலமே கூடி நின்று எங்களை வரவேற்றது. கட்சி நலனுக்கான கட்சியை நானும் ஆட்சியை ஈபிஎஸ்ஸும் பார்த்துக்கொள்வதாக உறுதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு நடந்தது உங்களுக்கே தெரியும்.
நடந்த பிரச்சினைகள் அனைத்தையும் பொறுத்துக்கொண்டேன். மிக மிகப் பொறுமையாக நடந்துகொண்டேன். கட்சியும் ஆட்சியும் முக்கியம் என்று நினைத்து இருந்தேன். என்னுடைய மனப் பக்குவம்தான் அதற்கு காரணம்.
எதிர்க் கட்சிகளிடம் உறவா?
யாரையும் நான் கடுஞ்சொல் சொன்னதில்லை. எதிர்க் கட்சிகளிடம்கூட தார்மீக ரீதியாக இன்முகத்துடன் பேசுவேன். அவர்களிடம் எவ்வித உதவிகளையும் பெற்றது கிடையாது.
எந்த நேரத்திலும் நான் துரோகம் செய்ததில்லை. கட்டாயப்படுத்தி என்னை முதல்வர் ஆக்கினர். ஆனாலும் யாரையும் அச்சுறுத்தியோ, கட்டாயப்படுத்தியோ நான் பணியாற்றவில்லை’’ என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.