டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக குல்தீப்யாதவ் களமிறங்குவார் என்று கருதப்படுகிறது.
இந்தியா – இலங்கை ஆகிய இரு நாடுகளும் இணைந்து நடத்திய டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் இன்றைய இறுதிப்போட்டியில் மோதுகிறது.
வருணுக்குப் பதில் குல்தீப்பா?
இந்திய அணியைப் பொறுத்தமட்டில் இந்த டி20 உலகக்கோப்பையில் பந்துவீச்சு சற்றும் கவலை அளிக்கும் வகையிலே உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பும்ரா கட்டுக்கோப்பாக பந்துவீசியதன் காரணமாகவே இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
குறிப்பாக, இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி ரன்களை வாரி இறைத்து வருகிறார். இந்திய – நியூசிலாந்து ஆகிய இரு அணிகளிலும் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தும் அணியே வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், வருண் சக்கரவர்த்திக்குப் பதிலாக இந்த போட்டியில் குல்தீப் யாதவ் இடம்பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
என்ன காரணம்?
ஏனென்றால், வருண் சக்கரவர்த்தி இந்த தொடரில் இதுவரை 13 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். முதல் 4 போட்டிகளிலே 9 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். ஆனால், அடுத்த 4 போட்டிகளில் 16 ஓவர்கள் வீசி 179 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். 4 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றியுள்ளார். முக்கியமான போட்டியான சூப்பர் 8 மற்றும் அரையிறுதியில் அவரது பந்துவீச்சை எதிரிணியினர் நொறுக்கியுள்ளனர்.
குல்தீப்யாதவ் இந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே களமிறங்கினார். அந்த போட்டியில் அவர் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார். அதன்பின்பு, அவர் பெஞ்சிலே உட்காரவைக்கப்பட்டு வருகிறார்.
யார் பெஸ்ட்?
குல்தீப் யாதவ் இதுவரை 54 டி20 போட்டிகளில் ஆடி 95 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 6.95 எகானமியாக வைத்துள்ளார். வருண் சக்கரவர்த்தி 44 டி20 போட்டிகளில் ஆடி 72 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 7.45 எகானமியாக வைத்துள்ளார். இன்றைய மைதானம் பெரிய மைதானம் என்பதாலும், பேட்டிங்கிற்கும் ஒத்துழைக்கும் என்பதால் பந்துவீச்சில் திறமையான அணியாக இந்திய அணி களமிறங்க வேண்டியது அவசியம் ஆகும்.
நியூசிலாந்து டிம் செஃய்பெர்ட், ஃபின் ஆலன், கிளென் பிலிப்ஸ், சாப்மன், மிட்செல், நீஷம் என அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ரவீந்திரா, சான்ட்னரும் களத்தில் நிலைத்துவிட்டால் அதிரடியில் மிரட்டுவார்கள். இதனால், இந்திய அணி அவர்களுக்கும் இடம் தராத வகையில் பந்துவீசவே விரும்பும். கடந்த அரையிறுதியில் நியூசிலாந்தின் தொடக்க ஜோடி டிம் செஃய்பெர்ட் – ஃபின் ஆலன் தென்னாப்பிரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கியது.
இதனால், இன்று இந்திய அணி தனது ப்ளேயிங் லெவனில் மிகுந்த கவனத்துடனே செயல்படும் என்று கருதப்படுகிறது.