கடந்த ஓராண்டாகவே மீனாட்சி, புவனேஸ்வரி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வாசலில் வாகனம் நிறுத்துவது தொடங்கி, தெருவை கூட்டி சுத்தம் செய்து கோலம் போடுவது வரை பிரச்னை மேல் பிரச்னை ஏற்பட்டது
திருச்சி அருகே எதிர் வீட்டில் வசிக்கும் குடும்பத்துடன் ஏற்பட்ட சண்டையில் நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற பெண் கைது செய்யப்பட்டார். அவரின் செயலுக்கு சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இயலாமையை வெளிக்காட்ட தாக்குதல்
பொதுவாகவே குடும்ப உறவுகளோ, அலுவலகமோ, அண்டை வீட்டில் வசிப்பவர்களோ யாராக இருந்தாலும் எல்லா நேரமும் அன்போடு இருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. சண்டை, சச்சரவுகள் என்பது அனைத்து உறவுகளிலும் இயல்பானது. பிடிக்கவில்லை என்றால் பேசாமல் இருப்பது நல்லது. ஆனால் பழி வாங்குகிறேன் என்ற பெயரில் வஞ்சம் தீர்ப்பதில் சிலரை அடித்துக் கொள்ளவே முடியாது. தங்கள் இயலாமையை வெளிகாட்ட முடியாமல் கொடூரமான செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அப்படியான ஒரு சம்பவம் தான் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
கொடூரமான தாக்குதலில் பலியான நாய்க்குட்டிகள்
திருச்சி மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியில் கம்பரசம்பேட்டை என்ற பகுதி உள்ளது. இங்குள்ள வெள்ளாந்தெருவில் ஜெய் கணேஷ் என்பவர் தனது மனைவி மீனாட்சி மிஸ்ரா என்ற 28 வயது பெண்ணுடன் வசித்து வருகிறார். ஜெய் கணேஷ் திருச்சி பெல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு எதிர் வீட்டில் தனியார் நிறுவனத்தில் கணேஷ் பிரபு என்பவர் தனது மனைவி புவனேஸ்வரியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஓராண்டாகவே மீனாட்சி, புவனேஸ்வரி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வாசலில் வாகனம் நிறுத்துவது தொடங்கி, தெருவை கூட்டி சுத்தம் செய்து கோலம் போடுவது வரை பிரச்னை மேல் பிரச்னை ஏற்பட்டது. இப்படியான நிலையில் கடந்த மார்ச் 4ம் தேதி வீட்டின் முன் கோலம் வரைவதற்கு தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த புவனேஸ்வரி, ஒரு கல்லை எடுத்து மீனாட்சியை நோக்கி வீச அது தவறுதலாக 3 வயது மகன் மீது பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. புவனேஸ்வரியின் இந்த செயலால் கடும் கோபமடைந்த மீனாட்சி மிஸ்ரா, புவனேஸ்வரி வீட்டில் வளர்த்து வந்த நாய் ஈன்ற குட்டிகளை ஈவு ஈரக்கமின்றி சுவற்றில் வீசி கொடூரமாக கொன்றார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவானது. சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி அளித்த புகார் அடிப்படையில் மீனாட்சியையும், சிறுவனை தாக்கியதாக ஜெய்கணேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் புவனேஸ்வரியையும் திருச்சி ஜீயபுரம் போலீசார் கைது செய்தனர்.
டென்ஷனான விஜய் ஆண்டனி
மீனாட்சி தன் வீட்டின் முன்னால் நாய், மாடு என எது நின்றாலும் கம்பு அல்லது கல்லால் அடித்து விரட்டும் கொடூர குணம் கொண்டவராக இருந்துள்ளார். அதற்கான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும் மீனாட்சியை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி “இதுதான் மனிதநேயமா?” என கேள்வியெழுப்பும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.