இறைவனுக்கு நன்றி செலுத்தும் மிக முக்கியப் பெருநாள் ஈதுல் ஃபித்ர் (நோன்பு பெருநாள்) ஆகும். புனித ரமளான் மாதத்தை நோன்பு, குர்ஆன் ஓதுதல், தர்மம் செய்தல் உள்ளிட்ட வணக்கவழிபாடுகளுடன் பூர்த்தி செய்தபின் இறைவன் வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஷவ்வால் மாத முதல் நாளில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் தினத்தின் பெயரே ‘ஈதுல் ஃபித்ர்’ என்று சொல்லப்படும்.
‘ஈத்’ என்ற அரபிச் சொல்லுக்கு ‘பெருநாள்’ என்றும், ‘ஃபித்ர்’ என்ற அரபிச் சொல்லுக்கு ‘நோன்பு துறத்தல்’ என்றும் பொருள். ஒரு மாதம் இறைவனுக்காக நோன்பிருந்து அந்த நோன்புக் காலம் முடிவடைந்ததை மகிழ்வுடன் கொண்டாடும் தினமே இது. இதுகுறித்து இறைவன் அருள்மறையில், ‘நீங்கள் ரமளானில் நோன்பிருக்கும் காலத்தை பூரணப்படுத்தி, உங்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டியமைக்காக அவனைபெருமைப்படுத்த வேண்டும்… அப்படி செய்தால் நீங்கள் நன்றி செலுத்தியோராவீர்கள்’ (அல்குர்ஆன் 2: 185) என்று குறிப்பிடுகிறான்.