தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் தேவையா என அஜித்திடம் கேள்வியெழுப்பட்டதாகவும், அதற்கு அவர் தேவையில்லை என சொன்னதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மாற்றம் வேண்டாம் என அஜித் சொன்னதாக போலியான தகவல் பரவி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் அதிருப்தியடைந்துள்ளனர். இதுதொடர்பாக அஜித் மேலாளர் விளக்கமளித்துள்ளார்.
234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் தங்கள் ஜனநாயக கடமையையாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் காலை 6.55 மணிக்கு தனது வாக்கினை பதிவு செய்தார். திருவான்மியூரில் உள்ள பாரதிதாசன் மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு வருகை தந்த அவர் முதல் ஆளாக வாக்களித்தார். அஜித்தைக் காண ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் புடைசூழ அஜித் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
பேசுபொருளாக மாறிய அஜித்தின் உடை
நடிகர் அஜித்குமார் வெள்ளை நிற கோட் உடையில் வாக்களிக்க வருகை தந்தார். அப்போது அவரின் ஆடையில் கருப்பு, சிவப்பு நிறம் இருந்ததால் யாருக்கு தான் ஆதரவு தெரிவிக்கிறார் என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். ஆனால் அஜித் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்பதால் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடக்கவில்லை என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
மாற்றம் தேவையில்லை என சொன்னாரா?
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் தேவையா என அஜித்திடம் கேள்வியெழுப்பட்டதாகவும், அதற்கு அவர் தேவையில்லை என சொன்னதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனால் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பலரும் அதிர்ச்சியடைந்தனர். அப்படியாக எந்த ஊடகத்திலும் தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் கூறியதாக வெளியான நமக்கு மாற்றம் தேவையில்லை என்ற கருத்து பற்றி கேட்டபோது, ”அவர் சொன்னது சரிதான்” என்று முதலமைச்சர் ஸ்டாலினும் பதிலளித்தார். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில் மாற்றம் தேவையில்லை என அஜித் சொன்னதாக தகவல் வதந்தி எனவும், அதில் உண்மையில்லை எனவும் அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார். இதனால் இந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.