சென்னையில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில் தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறைக்கு பின் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டது. வெயில் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறக்கும் தேதி அடுத்தடுத்து இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவ, மாணவிகள் காலை முதலே ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை தந்தனர்.சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலை பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.ஜூலை மாதம் இறுதிக்குள் சீருடை வழங்கப்படும் என்றும், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி நிதிநிலைமை சரியான பின்னர் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து குறித்து மாநில கல்வி கொள்கை வடிவமைத்த பின்னர் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.