அரசியல் கட்சித் தலைவர் எப்படி பேசக் கூடாது என்பதற்கு முன் உதாரணமாக திருமாவளவன் இருப்பதாக பாமக வழக்கறிஞர் பாலு விமர்சனம்.
நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம், சிதம்பரத்தில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பதை மனதில் வைத்து பாமகவுக்கு எதிராக விசிக தலைவர் திருமாவளவன் பேசி வருவதாக, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாலு குற்றம்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் வரக்கூடாது என ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் போராட்டம் நடத்தியதால் அங்கு வன்முறை ஏற்படும் சூழல் நிலவியது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அடுத்த உத்தரவு வரும் வரை கோயிலை பூட்டுமாறு உத்தரவிடப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு ஆவேசமாக உரையாற்றினார். அப்போழுது பாமக குறித்தும் அந்த கட்சியின் வழக்கறிஞர் பாலு மீது கடுமையான விமர்சனங்களை திருமாவளவன் முன்வைத்தார்.இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக வழக்கறிஞர் பாலு, அரசியல் கட்சித் தலைவர் எப்படி பேசக் கூடாது என்பதற்கு முன் உதாரணமாக திருமாவளவன் இருப்பதாக விமர்சித்தார். திருமாவளவனை அடையாளப்படுத்தியதே பாமக தான் எனவும் பாலு குறிப்பிட்டார். தேர்தலை மனதில் வைத்தே மேல்பாதி விவகாரத்தை திருமாவளவன் பேசி வருவதாகவும் கூறினார். மோடி சமூகத்தைப் பற்றி பேசியதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை திருமாவளவன் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் பாலு தெரிவித்தார்.