நடிகர் ரஜினிகாந்த் கோடிக்கணக்கான பணம் வைத்துள்ளதாகவும், அவர் மக்களுக்கு தொடர்ந்து உதவிசெய்ய முன் வர வேண்டும் எனவும் செல்லூர் ராஜு கேட்டுக்கொண்டார்.
ஆர்ஜே.தமிழ்மணி சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் மதுரை அருகே உள்ள கோவில்பாப்பாகுடியில் உள்ள மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை அதிமுக மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் .
அப்போது பேசிய அவர், ’நேற்றிரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை விமான நிலையத்தை விட்டு வெளியே வரும்போது கரண்ட் கட் ஏற்பட்டது. இது வழக்கமான ஒன்று தான். திமுக அரசு வந்தால் இதுதான் நிலைமை. இருளில் முழ்கி உள்ளது விடியா அரசு.
திமுக என்ற கரடியிடம் மாட்டி கொண்டு தமிழக மக்கள் தற்போது திண்டாடுகின்றனர். மின் கட்டண உயர்வு, தொழிற்சாலைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதை மறைப்பதற்கு தான் கரடி கதை. ஒற்றை தலைமையின் கீழ் அதிமுக சிறப்பாக. செயல்படுகிறது. ஒற்றை தலைமையின் கீழ் வருகிற தேர்தலில் வெற்றி வாகை சூடும்.
பாஜகவுக்கு அதிமுக பல்லக்கு தூக்குகிறது என மு.க.ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜகவுக்கு முதன்முதலில் பல்லக்கு தூக்கியது திமுக தான். அவர்கள் மத்திய பாஜக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தனர். பதவிகளை அனுபவித்தனர்.
திமுக கூட்டணி கட்சியின் பலத்தால் தான் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் வெவ்வேறு கொள்கை வேறுபாடு உள்ளது. அதுபோல தான் அதிமுகவுக்கு பாஜவுடன் கூட்டணி. ஒவ்வொரு கட்சியும் அவர்கள் கொள்கைகளில் இருந்து மாறுபட மாட்டார்கள். அதிமுக ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என OPS கூறியதை ஏற்க முடியாது. இவரே இவ்வாறு கூறிவிட்டு வழக்கும் தொடர்கிறார். தற்போது உள்ள அதிமுக ஒற்றுமையாக வலுவானதாக உள்ளது.
நடிகர் விஜயின் உதவி செய்யும் மனப்பான்மையை வரவேற்கிறோம். அவர் விளம்பரத்திற்காக செய்தாலும், உதவி மனப்பான்மையாக செய்தாலும் நடிகர் விஜய், ஏழை மக்களுக்கு தனது உதவிகளை, MGR போல தொடர்ந்து செய்ய வேண்டும்.
நடிகர் ரஜினி கோடிக்கணக்கான பணம் வைத்துள்ளார். அவரும் மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்ய முன் வர வேண்டும். அதே போல் நடிகர்கள் தொடர்ந்து உதவி செய்ய முன் வர வேண்டும். காலையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு கொடுக்கிறார்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு உப்புமா, கிச்சடி கொடுக்கிறார்கள். ஆனால் சிறையில் உள்ள கைதிகளுக்கு காலை, மதியம் இரவு என சிக்கன், மட்டன் என சத்தான உணவுகளை வழங்குகின்றனர். ஆனால், பள்ளி மாணவர்களுக்கு உப்புமா கொடுக்கின்றனர்.
பொறியாளர் பென்னி குயிக் சிலை, திமுக சார்பில் லண்டனில் ஒரு பூங்காவில் திறக்கப்பட்டது. ஆனால் அதற்கு பராமரிப்பு கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக, லண்டனில் உள்ள பென்னி குயிக் சிலை மூடி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பராமரிப்பு கட்டணம் செலுத்தவில்லை என்றால், அந்த சிலையை அப்புறப்படுத்தப்படும் என பூங்கா நிர்வாகம் கூறி உள்ளது. லண்டன் பூங்காவில் சிலை அகற்றப்பட்டால் திமுக அரசுக்கு பெரும் அவமானம்.
எனவே, உடனடியாக திமுக அரசு லண்டனில் பூங்காவில் வைக்கப்பட்டு உள்ள முல்லை பெரியாறு அணை கட்டிய பொறியாளர் பென்னி குவிக் சிலைக்கு பராமரிப்பு கட்டணம் செலுத்தி சிலையை திறக்க வழிவகை செய்யவேண்டும்.அல்லது பொறியாளர் பென்னிகுயிக்கின் வாரிசு தமிழகம் வந்து வசூல் செய்தால் மிகப் பெரிய அவமானம் ஏற்படும். சட்டசபையில் இது குறித்து, முன்னாள் முதல்வர் எடப்பாடி பேசினார். அப்போது திமுக அரசு மறுத்தது. ஆனால் தற்போது வரை பராமரிப்பு கட்டணம் செலுத்த வில்லை’ என்று தெரிவித்தார்.