முதல் இரண்டு திரைப்படங்களில் சொல்லி வைத்து சிக்ஸர் அடித்ததால் மூன்றாவது திரைப்படத்திலேயே நடிகர் விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்ற லோகேஷ் கனகராஜ்.
20 வருஷமெல்லாம் சினிமாவில் இருக்க எனக்கு ஆசை இல்லை. 10 படங்கள் எடுத்துவிட்டு சினிமாவிலிருந்து வெளியேறிவிடுவேன் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இயக்குனராக சாதித்தவர்களில் மிக முக்கியமான பெயராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். 2017ம் ஆண்டு சந்தீப் கிஷன், ஸ்ரீ நடிப்பில் வெளியான மாநகரம் படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். அடுத்த திரைப்படமான கைதியில் நாயகி இல்லாமல், பாடல்கள் இல்லாமல் ஒரு திரைப்படத்தை வணிக ரீதியில் வெற்றி பெற வைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார். அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
முதல் இரண்டு திரைப்படங்களில் சொல்லி வைத்து சிக்ஸர் அடித்ததால் மூன்றாவது திரைப்படத்திலேயே நடிகர் விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்ற லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படத்தை வெற்றி திரைப்படமாக மாற்றிக் காட்டினார். விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் முன்னணி இயக்குனராகவும் முன்னேறினார் லோகேஷ்.
சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட முன்னணி திரைபிரலங்களை நடிக்கவைத்து புதிய அத்தியாயம் படைத்தார். கட்சிப் பணிகளால் நான்கு ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்த கமலால் இனி ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுக்க முடியுமா என்ற கேள்விகளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் முதல் 400 கோடி வர்த்தகமான திரைப்படம் என்ற சாதனையை விக்ரம் திரைப்படம் படைக்க காரணமாக இருந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் விஜயுடன் கூட்டணி அமைத்த லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை இயக்கி வருகிறார். லியோ படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்ற ஆசை எல்லாம் எனக்கு இல்லை. 20 வருஷமெல்லாம் சினிமாவில் இருக்க வேண்டும் என்ற ஐடியா இல்லை என்றும் பத்து படங்கள் பண்ணிட்டு சினிமாவை விட்டு விலகிடுவேன் என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.