உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வயல்வெளியில் பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த பெண்ணின் கள்ளக்காதலன் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
அந்த பெண்ணிற்கு கடந்த 2015-ம் ஆண்டு வினோத் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் ஒரு வருடத்தில் திருமண வாழ்க்கை கசக்க, இந்த ஜோடி பிரிந்தது. அந்த பெண் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அப்போது ஆதேஷ் என்பவரை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. அந்த தொடர்பு பின் கள்ளக்காதலாக மாறியது.
இருவரும் தனிமையில் சந்திக்க, அந்த பெண் கர்ப்பமானார். இதனால் ஆதேஷ் இடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். ஆனால், ஆதேஷ் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. இதனால் அவரை தீர்த்துக்கட்ட முயற்சி செய்தார். அந்த பெண்ணை தீர்த்துக்கட்ட நான்கு பேர் உதவியை நாடினார்.
அவர்களும் கொலை செய்ய ஒப்புக் கொண்டர். சம்பவம் நடைபெற்ற ஜூலை 2-ந்தேதி ஆதேஷ் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அந்த பெண் ஆதேஷ் வீட்டிற்கு வந்ததும், தயாராக இருந்த தனது கூட்டாளிகளுடன் சேர்த்து செங்கலால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், உடலை வயல்வெளியில் வீசி, யாருக்கும் தெரியாததுபோன்று வீட்டில் இருந்துள்ளார். போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.