வாரம் ஒருமுறை கீரையை உணவில் சேர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் கீரையில் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து, கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் அதிகமாக உள்ளன.
மேலும் அடிக்கடி கீரையை உட்கொண்டு வந்தால், உடலில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளைத் தடுக்கலாம். கீரைகளில் முருங்கைக்கீரை சற்று கசப்புத்தன்மையைக் கொண்டிருந்தாலும், அது உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்கும்.
ஒவ்வொரு நாளும் மதியம் என்ன சமைப்பது என்று யோசிப்பீர்களா? அப்படியானால் ஒருமுறை முருங்கைக்கீரையைக் கொண்டு குழம்பு செய்யுங்கள். முருங்கைக்கீரையை பொரியல் செய்தால் சாப்பிடாத குழந்தைகள், முருங்கைக்கீரை குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இதை செய்வது மிகவும் ஈஸி. உங்களுக்கு முருங்கைக்கீரை குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பருப்பு வேக வைப்பதற்கு..
* பாசிப் பருப்பு – 1/2 கப்
* தண்ணீர் – 1.5 கப்
மசாலா பேஸ்ட்டிற்கு…
* நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
* மல்லி விதை – 1/2 டீஸ்பூன்
* மிளகு – 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் – 2
* சீரகம் – 1/4 டீஸ்பூன்
* சோம்பு – 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* பூண்டு – 5 பல் (நறுக்கியது)
* வெங்காயம் – 10 சின்ன வெங்காயம் (நறுக்கியது)
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் – 1/4 கப்
* தண்ணீர் – 1/2 கப்
குழம்பிற்கு..
* நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
* கடுகு – 1/4 டீஸ்பூன்
* முருங்கைக்கீரை – 1 கப்
* தண்ணீர் – 1 கப்
* உப்பு – 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் முருங்கைக்கீரை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரில் பாசிப்பருப்பை கழுவிப் போட்டு, அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு, மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், மல்லி விதைகள், மிளகு, வரமிளகாய், சீரகம், சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வறுக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து 2-3 நிமிடம் நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து, அதில் மஞ்சள் தூள் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு 1/2 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் முருங்கை கீரையை சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, மிதமான தீயில் வைத்து 1 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு வேக வைத்துள்ள பருப்பை மசித்து சேர்த்து, மீண்டும் 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து, 5-7 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான முருங்கைக்கீரை குழம்பு தயார்.