இன்று இரவு வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அந்த சப்பாத்திக்கு இதுவரை வீட்டில் செய்யாத ஒரு வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் நெய்க்காரப்பட்டி ஸ்டைல் தயிர் குருமாவை செய்யுங்கள்.
நெய்க்காரப்பட்டி என்பது பழனி அருகே உள்ள ஒரு சிறிய ஊர். இந்த ஊரில் தயிர் குருமா மிகவும் சுவையாக இருக்கும். இந்த தயிர் குருமா சப்பாத்தி, இடியாப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
உங்களுக்கு நெய்க்காரப்பட்டி ஸ்டைல் தயிர் குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெய்க்காரப்பட்டி ஸ்டைல் தயிர் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை எண்ணெய் – 2 டீஸ்பூன்
* கிராம்பு – 1
* ஏலக்காய் – 1
* பட்டை – 1/2 இன்ச்
* சோம்பு – 1 டீஸ்பூன்
* வரமிளகாய் – 2
* சின்ன வெங்காயம் – 10 (நறுக்கியது)
* பூண்டு – 6 பல் (நறுக்கியது)
* இஞ்சி – 1 இன்ச் (நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 2
* உப்பு – 1 டீஸ்பூன்
* முந்திரி – 10
* கசகசா – 2 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் – 1/2 கப்
* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
காய்கறிகள்..
* உருளைக்கிழங்கு – 2 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* கேரட் – 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* பச்சை பட்டாணி – 1/2 கப்
* பீன்ஸ் – 5-6 (நறுக்கியது)
தாளிப்பதற்கு…
* கடலை எண்ணெய் – 1 டீஸ்பூன்
* வெங்காயம் – 1 (நறுக்கியது)
* தயிர் – 1/2 கப்
* சிறிய எலுமிச்சை – 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
* கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கிராம்பு, ஏலக்காய், பட்டை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் சோம்பு, வரமிளகாய், சேர்த்து சில நொடிகள் வதக்கி, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வெங்காயம் மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் முந்திரி, கசகசா, பொட்டுக்கடலை சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி, துருவிய தேங்காய் மற்றும் மல்லித் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு குக்கரில் காய்கறிகள் அனைத்தையும் போட்டு, 1/2 கப் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் 1/2 கப் தயிருடன், 1/2 கப் நீரை ஊற்றி நன்கு அடித்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து நன்கு வதங்கியதும், வேக வைத்துள்ள காய்கறிகளை நீருடன் சேர்க்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, 1/2 கப் நீரை ஊற்றி குறைவான தீயில் வைத்து 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் அடித்து வைத்துள்ள தயிரை ஊற்றி கிளறி, குறைவான தீயில் வைத்து, ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான தயிர் குருமா தயார்.