உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஆட்டு குடல் சாப்பிட பிடிக்கும். ஆனால் அதை எப்படி சமைப்பது என்று தெரியாதா? அப்படியானால் இன்று ஆட்டு குடலை எப்படி சமைப்பது என்று நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
அதுவும் இன்று நாம் பார்க்கப் போவது கிராமத்து ஸ்டைலில் ஆட்டு குடல் குழம்பு எப்படி செய்வது என்பதைப் பற்றி தான். இந்த ஆட்டு குடல் குழம்பு சாதம் மற்றும் இட்லியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். கீழே கிராமத்து ஸ்டைலில் ஆட்டு குடல் குழம்பை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஆட்டு குடல் – 800 கிராம்
வறுத்து அரைப்பதற்கு…
* வரமிளகாய் – 8
* மல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் – 2 டீஸ்பூன்
* மிளகு – 2 டீஸ்பூன்
* சோம்பு – 1 டீஸ்பூன்
* பட்டை – 1 இன்ச்
* பூண்டு – 8 பல்
* இஞ்சி – 1 இன்ச்
* அரிசி – 3 டீஸ்பூன்
பிற பொருட்கள்…
* வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி – 4 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் – 1/2 கப் + 3 கப்
* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1/2 டீஸ்பூன்
* சோம்பு – 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் – 30
* பூண்டு – 5 பல்
* கறிவேப்பிலை – சிறிது
* கொத்தமல்லி – 1/4 கப்
செய்முறை:
ஆட்டு குடலை கழுவும் முறை:
ஆட்டு குடலை சமைப்பதாக இருந்தால், அதை நன்கு கழுவ வேண்டும். இல்லாவிட்டால் குழம்பானது மோசமான ருசியுடன் இருக்கும்.
* முதலில் ஆட்டு குடலை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு பாத்திரத்தில் சுடுநீரை எடுத்து, அதில் கழுவிய ஆட்டு குடலை சேர்த்து நன்கு கழுவ வேண்டும்.
* இல்லாவிட்டால் கொதிக்கும் நீரில் ஆட்டு குடலைப் போட்டு, 2-3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, பின் குடலை எடுத்து கத்தியால் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு துண்டுகளாக்கப்பட்ட ஆட்டுக் குடலை சுடுநீரில் 2-3 முறை நன்கு கழுவிவிட்டு, பின் குளிர்ந்த நீரால் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* இப்போது ஆட்டு குடல் சமைக்க தயாராக உள்ளது. ஆட்டு குடல் குழம்பின்
செய்முறை:
* முதலில் தக்காளி மற்றும் பெரிய வெங்காயத்தை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து, அதை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள, வரமிளகாய், மல்லி, சீரகம், சோம்பு, மிளகு, பட்டை, பூண்டு, இஞ்சி மற்றும் அரிசியை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வறுத்து இறக்கி, மிக்சர் ஜாரில் போட்டு, 1/2 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவி வைத்துள்ள ஆட்டு குடல், அரைத்த தக்காளி வெங்காய பேஸ்ட், அரைத்த மசாலா, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, 3 கப் நீரை ஊற்றி குக்கரை மூடி, 10 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு வேக வைத்துள்ள குடலை வாணலியில் சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து, 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கிராமத்து ஸ்டைல் ஆட்டு குடல் குழம்பு தயார்