சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் உள்ள சீன ஓட்டுநர் ஒருவர், அவரது காரில் பயணித்த பயணிகளைப் பார்த்து “நீ ஒரு இந்தியர்.. நீ முட்டாள்” என்று இனவெறியுடன் நடந்து கொண்ட சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சிங்கப்பூரில் பெண் ஒருவரையும் அவரது மகளையும் பார்த்து கார் டிரைவர் மோசமாகப் பேசியுள்ளார். சீனாவைச் சேர்ந்த அந்த நபர் அந்த பெண்ணிடம் பேசும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
”நீ இந்தியர்.. நீ முட்டாள்” என்று அந்த டிரைவர் கூறியதாக 46 வயதான ஜனெல்லே ஹோடன் தெரிவித்துள்ளார். அந்த பெண் தனது ஒன்பது வயது மகளுடன் அந்த சீன டிரைவரின் டாக்ஸியில் சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
டாக்ஸி:
இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் 46 வயதான ஜனெல்லே ஹோடன் தனது மொபைலில் பதிவு செய்துள்ளார். அவர்கள் இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் மெல்லச் சண்டையாக மாறுவதும் அந்த வீடியோவில் தெரிகிறது. இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்துள்ளது. அங்கே சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் தடா என்ற செயலி மூலம் ஹோடன் டாக்ஸியை புக் செய்துள்ளார். அவர்கள் சென்ற ரூட்டில் மெட்ரோ பணிகள் நடந்து வந்துள்ளது. இதனால் சாலைகளை பிளாக் செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த அந்த டிரைவர் திடீரென தன்னை பார்த்துக் கத்த தொடங்கியதாக ஹோடன் கூறினார். தவறான முகவரியைக் கொடுத்ததாகவும் சரியாக வழியைச் சொல்லவில்லை என்றும் தன்னை பார்த்துக் கத்த ஆரம்பித்தாக ஹோடன் தெரிவித்துள்ளார்.
இனவெறி:
இதை எல்லாம் வீடியோவாக எடுத்த ஹோடன், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அவரது இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டானது. மேலும், அந்நாட்டின் ஊடகங்களும் இந்த வீடியோவை செய்தியாக வெளியிட்டன. அதில் அந்த சீன டிரைவர் கூறிய கருத்துகள் மிகப் பெரியளவில் சர்ச்சையானது. வாகனம் ஓட்டும் போதே திடீரென அந்த டிரைவர், “நீ ஒரு இந்தியர்.. நான் சீனர்.. நீ ரொம்ப ரொம்ப மோசம். முட்டாள்” என்று கத்தியுள்ளார். அதற்கு ஹோடன், “நான் இந்தியரே இல்லை.. சிங்கப்பூர்- யூரேசியன்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அங்குள்ள செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த ஜனெல்லே ஹோடன், “அவர் மிக மோசமாகப் பேசினார். ஒரு கட்டத்தில் ஆவேசமாகக் கத்த ஆரம்பித்தார். இதனால் எங்கு அடித்து சண்டை போடத் தொடங்கிவிடுவாரோ என்று அச்சமடைந்தேன். அதன் பின்னரே என்னைப் பாதுகாத்துக் கொள்ள அந்தச் சம்பவத்தை வீடியோ எடுக்கத் தொடங்கினேன். எனது நிறத்தை வைத்து அவர் இப்படிப் பேசியுள்ளார்.
விசாரணை:
நான் இந்தியரா இல்லையா என்பது இரண்டாம்பட்சம்.. அவர் சொன்ன வார்த்தைகள் நிறைய மோசம். எப்படி அவர் இன ரீதியாகக் குறிவைத்து இப்படிப் பேசலாம். இதை ஏற்கவே முடியாது. எனது குழந்தை எனது அருகில் இருக்கும் போதே இந்தளவுக்கு மோசமாகப் பேசியுள்ளார்.. இதனால் எனது குழந்தையும் ரொம்பவே பயந்து போய் விட்டார்” என்று கூறினார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், டாக்ஸி புக்கிங் தளமான தடா இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.
தடா செயலியில் இனவெறி, பாகுபாட்டிற்கு இடமில்லை என்றும் இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தடா செயலி தெரிவித்துள்ளது. டிரைவர் மீது தவறு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.