இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் அல்லது சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் ஒரே மாதரியான சட்னியை செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் உங்கள் வீட்டில் வேர்க்கடலை மற்றும் கொத்தமல்லி உள்ளதா? அப்படியென்றால் அவற்றைக் கொண்டு கொத்தமல்லி வேர்க்கடலை சட்னியை செய்யுங்கள்.
இந்த கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சற்று வித்தியாசமான சுவையுடனும் இருக்கும். முக்கியமாக இந்த சட்னியை செய்தால், ஒரு இட்லி சாப்பிடும் உங்கள் குழந்தை 2 இட்லியை சாப்பிடுவார்கள். இந்த சட்னி இட்லிக்கு மட்டுமின்றி, தோசை, உப்புமா, பொங்கல் போன்றவற்றுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். உங்களுக்கு கொத்தமல்லி வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேர்க்கடலை – 1/2 கப்
* கொத்தமல்லி – 1/2 கப்
* பச்சை மிளகாய் – 3
* புளி – 1 இன்ச் துண்டு
* வெல்லம் – சிறிது
* கடுகு – 1/4 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு – 1/4 டீஸ்பூன்
* சீரகம் – 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
* வரமிளகாய் – 1
* எண்ணெய் – 3 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையைப் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் வேர்க்கடலையில் உள்ள தோலை நீக்கிவிட வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கொத்தமல்லியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த வேர்க்கடலை மற்றும் புளியை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், கொத்தமல்லியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி, அடுப்பை அணைத்துவிட்டு, தாளித்ததை சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி தயார்.