சென்னை:
முள்ளங்கி சாப்பிட்டிருப்பீர்கள், முள்ளங்கி கீரையை சாப்பிட்டுள்ளீர்களா? முயல்கள் விரும்பி சாப்பிடும் முள்ளங்கி கீரையின் மருத்துவ குணங்கள் என்ன?
முள்ளங்கி வெள்ளை நிறத்திலும் பிங்க் நிறத்திலும் பூமிக்கு அடியில் விளையக் கூடியது. இந்த முள்ளங்கியில் சிகப்பு அதாவது பிங்க் நிறம் மிகவும் நல்லது என்பார்கள். இதை சாம்பாரில் போட்டால் வீடே கமகமக்கும்.
இந்த முள்ளங்கி ஒரு வித வாசனை வரும் என்பதாலும் சீதளம் செய்யும் என்பதாலும் இதை பலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் இது உடலுக்கு குளிர்ச்சியை தரும். இதை விட முள்ளங்கியின் தலை பகுதியில் உள்ள கீரை உடலுக்கு நல்லது.
வயிற்றில் உள்ள பூச்சிகளை கொல்லும், புண்களை எளிதில் ஆற்றும். சிறுநீரை பெருக்கி வெளியேற்ற உதவும். உடல் சூட்டுக்காரர்கள் இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சியாகும். அதே போல் புளிப்பேற்பத்தையும் குறைத்துவிடும். இந்த முள்ளங்கி கீரையில் 5 கிராம் புரதம் உள்ளது. அது போல் இரும்பு சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து உள்ளிட்டவை இருக்கின்றன. இந்த சத்துகள் முள்ளங்கியில் இருப்பதை விட கீரையில்தான் அதிகமாக இருக்கிறதாம். மலத்தை இளக்கும் தன்மையும் இந்த கீரைக்கு உண்டு. தோல் வியாதிகள் மறையும். வாயில் வறட்சிகள் நீங்கும். விட்டமின் சி இருக்கிறது.
சர்க்கரை நோயாளிகள் இந்த கீரையை சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். இதய பிரச்சினைகள் உள்ளவர்களும் வாரத்தில் ஒரு முறையாவது இந்த கீரையை உண்ண வேண்டும். சிறுநீரக பிரச்சினைக்கும் அருமருந்து. சிறுநீரக கற்களை நீக்கும். எடைக் குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. கெட்ட கொழுப்பையும் குறைத்து ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதையும் தடுத்து நிறுத்துகிறது.
கண் பிரச்சினைகளுக்கும் இது ஒரு நல்ல தீர்வு. இந்த கீரைகள் சிறுவயதிலேயே சாப்பிட்டு வந்தால் இளம் வயதிலேயே கண்ணாடி போடும் பிரச்சினையை தவிர்க்க முடியும். சுவாச பிரச்சினைகளுக்கும் இது நல்லது. சுவாச பாதையில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றும். இந்த கீரையை கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும் சாப்பிடலாம். எலும்பு தேய்மானத்தையும் சரி செய்ய உதவுகிறது. இனி இந்த முள்ளங்கியை வாங்கினால் கீரையை எட்ட எறியாதீர்கள்.