தற்போது ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இப்படி குளிர்ச்சியான காலநிலையில் குறிப்பாக மாலை வேளையில் பலருக்கும் காரசாரமாகவும், மொறுமொறுப்பாகவும், சூடாகவும் சாப்பிடத் தோன்றும்.
உங்களுக்கும் அப்படி தோன்றுகிறதா? மாலை வேளையில் என்ன ஸ்நாக்ஸ் செய்வதென்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அரிசி மாவும், மைதாவும் உள்ளதா? அப்படியானால் அந்த பொருட்களைக் கொண்டு போண்டா செய்யுங்கள்.
இந்த அரிசி மாவு போண்டா மாலை வேளையில் சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். உங்களுக்கு அரிசி மாவு போண்டா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரிசி மாவு போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அரிசி மாவு – 1/2 கப்
* மைதா – 1 கப்
* ரவை – 1 டீஸ்பூன்
* தயிர் – 1/4 கப்
* தண்ணீர் – 1/2 கப்
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி – 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை – 1 கையளவு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
* பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் அரிசி மாவு, மைதா, ரவை, தயிர், தண்ணீர் ஊற்றி போண்டா பதத்திற்கு பிசைந்து, 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் பேக்கிங் சோடாவை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை, சிறு சிறு போண்டாக்களாக எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வைத்து முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான அரிசி மாவு போண்டா தயார்.