சென்னை:
ஒரு கொடியின் வேர், இலை, பழம் என அனைத்துமே நன்மைகளை வாரி தருகிறது என்றால் அது நன்னாரிதான்.. தலைவலி முதல் பால்வினை நோய் வரை போக்கக்கூடிய சக்தி இந்த நன்னாரிக்கு உண்டு.
வெயில் காலத்தில் சர்பத் தயாரித்து இந்த நன்னாரியை சாப்பிடுவோம். ஆனால், இந்த நன்னாரியின் வேர்களை, நன்றாக அலசி சுத்தப்படுத்திவிட்டு, பச்சையாகவோ அல்லது நிழலில் உலர்த்தியோ மண்பானை நீரில் போட்டு சேர்த்து குடித்து வந்தால், உடலிலுள்ள உஷ்ணங்கள் எல்லாமே நீங்கிவிடும். அந்த அளவுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது இந்த வேர்கள்.
இந்த வேர்களை இடித்து, தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து காய்ச்சி வைத்து கொண்டாலே பல நோய்கள் பஞ்சாய் பறந்துவிடும்.. அல்லது நன்னாரி வேரை இடித்து, தண்ணீரில் ஊறவைத்து, இந்த தண்ணீருடன் சிறிது கருப்பட்டி சேர்த்து குடித்தால், அஜீரணக் கோளாறுகள் நீங்கும்..
பற்கள் ஈறுகள்:
குழந்தைகளுக்கு இந்த பானத்தை குடிக்க தந்தால், செரிமானம் எளிதாக நடைபெற்று பசி அதிகரிக்கும்.. இந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால், பற்களும் ஈறுகளும் பலமடையும்.. கிருமிகள் நீங்குவதுடன், துர்நாற்றமும் பறந்தோடிவிடும். ஒற்றை தலைவலி, செரிமானம், பித்தம், போன்றவற்றை தணிக்க இந்த நன்னாரி வேர்கள் உபயோகமாகின்றன.
சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் இருந்தால், இந்த நன்னாரி நீரை குடிக்கலாம்.. சிறுநீர் நன்றாக பிரிந்துவிடும். அல்சர் புண்களை நெருங்க விடாமல் தடுக்கிறது.. கல்லீரலை பாதுகாக்கிறது.. முடக்குவாதத்தை அண்ட விடாமல் காக்கிறது.. சிறுநீரகத்தை சீராக இயங்க வைக்கிறது..
ஒற்றை தலைவலி:
ஒற்றை தலைவலி, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நன்னாரி நல்ல மருந்தாகும். நன்னாரி வேர்களை சூரணம் போல தயாரித்து, தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலையும் குணமாகும்.ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.. இதனால், சருமத்தில் வயதான சுருக்கங்களும் தள்ளிப்போடப்படுகின்றன.. சரும ஆரோக்கியம் செழிக்கிறது..
மூளை செல்களை விரைவாக அழிந்துவிடுவதில் இருந்து பாதுகாப்பதுடன், முதுமையில் வரக்கூடிய மறதி நோயான டிமென்சியா, அல்சைமர் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது இந்த வேர்கள் காக்கின்றன..
உதிரப்போக்கு:
பெண்களுக்கு அதிகமான உதிரப்போக்கு இருந்தால், வேரை சுத்தம் செய்து, அதை பாலில் சேர்த்து அரைத்து வடிகட்டி குடித்து வந்தாலே அதிக உதிரப்போக்கு மட்டுப்படும். வெள்ளைப்படுதல் நோயும் மெல்ல மெல்ல குணமாகும்… இந்த வேர்களுடன், மல்லி விதைகளையும் சேர்த்து கொதிக்க வைத்து, பால், நாட்டுச்சர்க்கரை கலந்து சாப்பிட்டால், பித்தம் தொடர்பான அத்தனை கோளாறுகளும் நீங்கிவிடும்.