கடந்த 3 மணி நேரத்தில் மிக்ஜாம் புயல் வலுவடைந்துள்ளதாக கூறியுள்ள தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மிக்ஜாம் புயல், நாளை அதிகாலையில் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்க உள்ள நிலையில், சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னைக்கு கிழக்கே மிக்ஜாம் புயல் தற்போது மையம் கொண்டுள்ளது. இந்த புயல் கரையை நெருங்குவதால், சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
“குறுகிய நேரத்தில் அதிக மழைப்பொழிவு”
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக வளசரவாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் தலா 20 சென்டிமீட்டர் மழைப்பதிவாகியுள்ளது. சோழிங்கநல்லூர், பெருங்குடி, கோடம்பாக்கத்தில் தலா 18 சென்டி மீட்டர் மழைப்பொழிந்துள்ளது. மதுரவாயல், கத்திவாக்கம், அம்பத்தூர், மீனம்பாக்கம் பகுதிகளிலும் 12 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. சொல்லப்போனால், சென்னை, புறநகர் பகுதிகளில் குறுகிய நேரத்தில் அதிகமாக மழைப்பொழிந்துள்ளது.
இதே போன்று, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. சென்னை எண்ணூரில் மணிக்கு 70 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசியது.
சென்னையில் முற்றிலும் மழைவிட எத்தனை மணி நேரம் ஆகும்?
இந்த நிலையில், சென்னையில் முற்றிலும் மழை விடுவதற்கு 9 மணி நேரம் ஆகும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 6 மணி நேரத்திற்கு தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என்றும் மீண்டும் இரவைப் போல கனமழை பெய்யும் எனவும் கூறியுள்ளார். சென்னைக்கு கிழக்கே இருக்கும் புயல், வடகிழக்கு நோக்கி செல்ல 6மணி நேரம் எடுத்துக் கொள்வதால், அதுவரை மழைநீடிக்கும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். புயலானது, 150 கிலோமிட்டர் தொலைவு சென்ற பிறகுதான் படிப்படியாக மழை குறையும் எனக் கூறியுள்ள அவர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மதியம் வரை கனமழை நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
வலுவடைந்துள்ளது மிக்ஜாம் புயல்
கடந்த 3 மணி நேரத்தில் மிக்ஜாம் புயல் வலுவடைந்துள்ளதாக கூறியுள்ள தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் , பழவேற்காட்டில் இருந்து 140 கி.மீ. தொலைவில் மிக்ஜாம் புயல் உள்ளதாகவும், 10 முதல் 14 கி.மீ., வேகத்தில் நகரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.