சென்னை:
தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய கொரோனா வேரியன்ட் பரவவில்லை என கொரோனா தரவு ஆய்வாளர் விஜயானந்த் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவத் தொடங்கியது. சுமார் 200 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த நோய் பரவியதால் பொருளாதார அளவில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதனால் நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் கொரோனா வைரஸை உலக சுகாதார நிறுவனம் உலக பெருந்தொற்றாக அறிவித்தது.

இந்த பெருந்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து அனைத்து தொழில்களுமே முடங்கின. லாக்டவுன், வீட்டிலிருந்தே பணியாற்றுதல் , வேலை இழப்பு, ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு போன்ற விஷயங்கள் பொதுமக்களின் வாழ்வை புரட்டி போட்டது.
2020, 2021 ஆகிய ஆண்டுகளில் கடும் உச்சத்தில் இருந்த கொரோனா வைரஸ் 3 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் மீண்டும் பரவல் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. தினமும் 1, 2 என்ற நிலையில் இருந்த கொரோனா தொற்று நேற்று ஒரே நாளில் 230 பேருக்கு பரவத் தொடங்கிவிட்டது.
பல மாதங்களாக 500 க்கும் குறைவாக இருந்த நிலையில் கேரளாவில் திடீரென ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 1000த்தை தொட போவதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது ஐயப்பன் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் சென்று வருகிறார்கள். அவர்கள் கொரோனாவை தொற்றி வந்துவிடுவார்களோ என்ற அச்சம் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து கொரோனா டேட்டா அனலிஸ்ட் விஜயானந்த் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா இந்தியா தரவுகளின்படி இந்தியாவில் கடந்த 30 நாட்களாக புதிய வேரியண்ட் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கெனவே இருக்கும் ஓமிக்ரான் வேரியண்ட்களான (எக்ஸ்பிபி, ஓமிக்ரான், பிஏ 2. 38) உள்ளிட்டவை காணப்படுகின்றன. எனவே பயப்படுவதற்கு எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.