இன்று கிறிஸ்துமஸ் என்பதால், அனைவருக்கும் விடுமுறை விடப்பட்டருக்கும். இப்படி விடுமுறை நாட்கள் வரும் போது தான் நமக்கு பிடித்த உணவுகளை சமைத்து நீண்ட நேரம் நிம்மதியாக சாப்பிடலாம்.
நீங்கள் கிறிஸ்துமல் அன்று காலை பூரி, சப்பாத்தி செய்யப் பேகிறீர்களானால், அதற்கு என்ன ஸ்பெஷலாக சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறிர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு இப்படி தவா மசாலாவை செய்யுங்கள்.
உங்களுக்கு தவா பன்னீர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே தவா பன்னீர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* பன்னீர் – 200 கிராம்
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி – 2 (அரைத்தது)
* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
* வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
ஊற வைப்பதற்கு….
* கெட்டி தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* கசூரி மெத்தி – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்து, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி 30 நிமிடம் ஃப்ரிட்ஜ்ஜில் ஊற வைக்க வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து நன்கு நிறம் மாற வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, நன்கு எண்ணெய் பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து, கிளறி, 1/2 கப் நீரை ஊற்றி, கரம் மசாலாவைத் தூவி, மிதமான தீயில் வைத்து 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் வெண்ணெயை சேர்த்து கிளறி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான தவா பன்னீர் தயார்.