தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டதால், தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாகவே அவையில் இருந்து ஆளுநர் புறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் இடையே பல்வேறு விவகாரங்களில் பனிப்போர் இருந்து வந்த நிலையில், கடந்தாண்டு ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற சில வாக்கியங்களை தவிர்த்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அவராகவே சிலவற்றை சேர்த்து ஆளுநர் உரையில் வாசித்தார்.
இது திமுக எம்.எல்.ஏ.க்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக செயல்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் தாமாக முன்வந்து பேசிய வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை தயாரிக்கச் செய்தார். ஆளுநர் உரையை நிறைவு செய்ததும் தொடர்ந்து அவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அரசின் உரையை ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை என விமர்சித்ததுடன், ஆளுநர் தாமாக பேசிய வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார்.முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்ற தொடங்கியதுமே அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்து விட்டனர். எனினும், ஸ்டாலின் தமிழில் ஆற்றிய உரையின் விளக்கத்தை தனது பாதுகாவலர் மூலமாக அறிந்து கொண்ட ஆளுநரும், ஸ்டாலின் உரையை நிறைவு செய்வதற்கு முன்பாகவே, அவையில் இருந்து புறப்பட்டார். வழக்கமாக தேசிய கீதம் இசைக்கப்பட்ட பிறகே ஆளுநர் அவையில் இருந்து புறப்பட்டுச் செல்வார். ஆனால், தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டதால், தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாகவே அவையில் இருந்து ஆளுநர் புறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.அதனை தொடர்ச்சியாக திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன், முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மத நல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல், ஆகிய கொள்கைகள் இந்த அரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் பின்பற்றி பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகிறது என்ற வாசகங்களை ஆளுநர் ரவி வாசிக்காமல் தவிர்த்ததாக கடந்த ஆண்டு ஆளுநர் உரையில் சர்ச்சை எழுந்தது.இந்த சம்பவத்திற்கு பிறகும் ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையிலான பனிப்போர் முற்றிய நிலையில், பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியதாக தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியது. தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையிட்ட நிலையில், நீதிமன்றம் தலையிட்டு இரு தரப்புக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்கியது. இந்த சூழலில், இன்று ஆளுநர் உரையுடன் இந்த ஆண்டுக்கான முதல் பேரவைக் கூட்டம் தொடங்குகிறது.