குஷ்புவுக்கு எதிராக போராட்டம் வலுத்துவரும் நிலையில், இந்த பூச்சாண்டி வேலை எல்லாம் தன்னிடம் காட்ட வேண்டாம் என அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகர் குஷ்பு, சென்னை செங்குன்றத்தில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் பிச்சைப் போட்டால் திமுக-வுக்கு அவர்கள் வாக்களிப்பார்களா?” என பேசினார். இது திமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குஷ்புவின் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் குஷ்புவை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திமுக மகளிர் அணியினர் குஷ்புவின் உருவ பொம்மை மற்றும் குஷ்பு படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றம் தேனி பழைய பேருந்து நிலையம் அருகிலும் குஷ்புவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகளிர் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்திய குஷ்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.
தருமபுரி, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் குஷ்புவை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் வலுத்தன.
”திசை திருப்பும் வேலையில் திமுக”
இந்த நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள குஷ்பு, இதுபோன்ற பூச்சாண்டி வேலை எல்லாம் தன்னிடம் காட்ட வேண்டாம் எனக் கூறிmaயுள்ளார். தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
A simple message to our CM Thiru @mkstalin avl. pic.twitter.com/KeDQ1fHLZ8
— KhushbuSundar (Modi ka Parivaar) (@khushsundar) March 13, 2024
பெண்களை கேவலப்படுத்துவது, அவதூறாக பேசுவது, பெண் குறித்து தவறான விஷயங்களைப் பரப்புவது எல்லாம் திமுகவின் டிஎன்ஏவில் உள்ளது என்றும் குஷ்புவின் டிஎன்ஏவில் கிடையாது எனவும் தெரிவித்தார். தான் தவறு செய்தால், குழந்தையாக இருந்தாலும் கீழே விழுந்து மன்னிப்புக் கேட்பேனே தவிர பயந்து ஓடமாட்டேன் என்றும் குஷ்பு கூறியுள்ளார்.
தான் பேசியதை தவறான அர்த்தம் எடுத்துக்கொண்டு அதை மட்டும் மக்களிடம் எடுத்துக் காட்டி, அவர்களை திசைதிருப்பும் வேலையை திமுகவினர் செய்வதாகவும் எந்தெந்த வகையில் மக்களை ஏமாற்றுவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும் எனக்கும் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தான் பேசிய பழைய காணொலிகளையும், ட்வீட்களையும் எடுத்துப் போடுவது திமுகவின் டிஎன்ஏ என விமர்சித்த குஷ்பு, நடப்பு பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு அவர்களிடம் ஏதும் இல்லை என்றார்
தமிழகத்தில் உள்ள தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்குப் பதிலாக டாஸ்மாக் எண்ணிக்கையை குறைத்தால், அவர்கள் பல ஆயிரங்களை சேமித்து, அவர்களது குடும்பங்கள் நல்லபடியாக இருக்கும் என்பதையே தான் கூறியதாகவும் இந்த விஷயத்தை திசைத்திருப்பி, பெண்களை கேவலப்படுத்தியது போல நான் பேசியதாக திமுகவினர் கூறுவதாகவும் விளக்கமளித்துள்ளார்.
தைரியமாக பேச வேண்டிய விஷயங்களை முன்வைத்து பேச வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்தையும் எனக்கு சொல்லிக்கொடுத்தது, என்னுடைய ஆசான் மறைந்த முதல்வர் கருணாநிதி என்று குஷ்பு புகழாரம் சூட்டியுள்ளார்.
பெண்களை சமூகத்தின் நல்ல இடத்தில் வைத்து அழகுபார்க்கும் எண்ணம் திமுகவுக்கு கிடையாது என குஷ்பு தனது வீடியோவில் பேசியுள்ளார்.