பாமகவுக்கு 10 தொகுதிகளை பாஜக அளிப்பது தொடர்பாக ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-பாமக இடையே கூட்டணி அமைத்து, தொகுதிப்பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பிடித்திருந்த அதிமுக-பாஜக இடையே அண்மையில் பிரிவு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பிடித்திருந்த பாட்டாளி மக்கள் கட்சி, இந்த முறை அதிமுகவுடன் ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தையும், மற்றொரு பக்கம் பாஜகவுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தது.
அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் பாமக நிர்வாகிகள் சந்தித்து கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு குறித்து பேசினர். ஆனால் இந்த சந்திப்பு திருப்திகரமாக இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஜக பாமக இடையே நேற்று சுமூக சூழல் உண்டானது.
குறிப்பாக தேர்தலில் பாஜக உடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் 10 நாடாளுமன்றத் தொகுதிகளை பாமக கேட்டதாகவும் அதற்கு பாஜக இசைவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் உள்ள டாக்டர் அன்புமனியின் இல்லத்திற்கு பாஜக நிர்வாகிகளான மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தனர்.
பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
இந்த ஆலோசனை கூட்டத்தில் பாமக கேட்ட 10 தொகுதிகளை பாஜக அளிப்பது தொடர்பாக ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. குறிப்பாக தருமபுரி, விழுப்புரம், சிதம்பரம், ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர்,சேலம், மத்திய சென்னை, திண்டுக்கல் மற்றும் தென் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியையும் பாமக கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
முன்னதாக 12 சீட்டுகளை பாமக கேட்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில் அது தற்போது 10 ஆக குறைந்திருக்கிறது. பாஜக, பாமக தொகுதிப்பங்கீட்டு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையின்போது, ராமதாஸின் தொடர் போராட்டங்கள் குறித்து, பாஜக தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலை ஆர்வமாக கேட்டார். மதுவிலக்கு குறித்து இரு கட்சிகள் இடையே போராட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சேலத்தில் நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், இணைந்து அமரும் வகையில் இன்று இரண்டு கட்சிகளும் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளனர்.
பாஜக -பாமக இடையிலான ஒப்பந்தம் பாமக தொண்டர்களை ஒரு பக்கம் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தாலும், அது பாமகவின் தலைமை எடுத்துள்ள முடிவு என்றே கருதப்படுகிறது.