தல தோனியை பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு கவனம் ஈர்த்திருக்கிறது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர், இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. இன்றைய முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் களம் காண இருக்கின்றன. திடீரென சென்னை அணி நிர்வாகம் கேப்டன் பதவியை ருதுராஜ் கெயிக்வாட்டிடம் அளித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த போட்டியிலும் இதே பாணியில் கேப்டன் பதவியை சென்னை அணி ரவீந்திர ஜடேஜாவின் கையில் கொடுத்தது. அந்த சீசன் எளிதாக வென்றிருக்க வேண்டிய போட்டிகளில் சென்னை அணி சொதப்பியது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சீசனில் பலத்த பரபரப்புக்கு மத்தியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை அணி வெற்றி வாகை சூடியது. இந்த சூழலில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனியுடன் இருக்கும் படத்தை ரோகித் சர்மா பதிவிட்டு கை குலுக்கும் எமோஜியை பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் அறிமுகமான காலத்தில் இருந்து தொடர்ந்து விளையாடி வரும் தோனி, ரோகித் மற்றும் பெங்களூரு அணியின் விராட் கோலி ஆகியோரில் மூவரும் தற்போது கேப்டன் பதவியில் இல்லை.
ஆனால் தங்கள் அணிகளுக்கு மூவரும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். இந்த சூழலில் தாமும் கேப்டன் பதவியில் இல்லை, தோனியும் கேப்டன் பதவியில் இல்லை என்பதை குறிக்கும் வகையிலேயே இன்ஸ்டாவில் ரோகித் பதிவிட்டு கேலி செய்துள்ளாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
25 பேர் கொண்ட சென்னை அணியில் , தோனி உட்பட தற்போது 3 அதிரடி விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். இன்றைய போட்டியில் விக்கெட் கீப்பராக தோனி நிற்பாரா? இல்லை, இன்றைய போட்டியில் விளையாடாமல் அணிக்கு வெளியே இருந்து ஆலோசனைகளை தோனி வழங்குவாரா?என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தோனி இல்லாத சென்னை அணியை நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்று ரசிகர்கள் கூறி வரும் நிலையில், எந்த வகையான ஷாக் தரப்போகிறதோ சென்னை சூப்பர்கிங்ஸ் அணி என ரசிகர்கள் அதிர்ச்சி கலந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.