டெல்லி சட்டசபைத் தேர்தல், பஞ்சாப் சட்டசபை தேர்தல், டெல்லி மாநகராட்சி தேர்தல் என அடித்து ஆடி வரும் ஆம் ஆத்மி, தற்போது குஜராத், இமாச்சல் பிரதேசம் தேர்தல்களிலும் கவனம் பெற்றுள்ளது. பத்தே ஆண்டுகளிம் ஆம் ஆத்மியின் அசூர வளர்ச்சி சாத்தியமானது எப்படி?
தேர்தல் சுரம்:
பொதுவாக வட மாநிலங்களில் தேர்தல் என்றால் அது பாஜக vs காங்கிரஸ் என்று தான் இருக்கும். இவை இரண்டு தான் பிரதான தேசிய கட்சிகளாக இருந்து வந்தன. ஆனால் தற்போது காங்கிரஸின் நிலை சற்று மோசமாகியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது. தற்போதைய தேர்தல்களில் பாஜக vs ஆம் ஆத்மி என்ற நிலைக்கு வந்துள்ளது. காங்கிரஸின் இடத்தை ஆம் ஆத்மி பிடிக்கக்கூடும் என கணிக்கப்படுகிறது.

ஆம் ஆத்மி:
கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனலோக்பால் மசோதாவை அமல்படுத்தக் கோரி அண்ணா அசாரேவின் ஊழலுக்கு எதிரான இந்தியா எனும் இயக்கம் தொடங்கப்பட்டது. இதை அரசியல் அமைப்பாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் ஆம் ஆத்மி.
2013 டெல்லி தேர்தல்:
ஆம் ஆத்மி கட்சி 2013 ஆம் ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தலில் அறிமுகமாகி 70 இடங்களில் 28 இடங்களை வென்றது. அப்போது 8 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி வெளியே இருந்து ஆதரிப்பதாக கூறியிருந்த நிலையில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தது. பின்னர் ஜனலோக்பால் சட்டத்தை நிறைவேற்ற சட்டசபையில் போதிய ஆதரவு இல்லாததால் முதலமைச்சரும் அவரது அமைச்சரவையும் பதவி விலகினர்.

2015 & 2022 டெல்லி தேர்தல்:
இதையடுத்து 2015 ஆம் ஆண்டு நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் 67 இடங்களில் ஆம் ஆத்மி வென்றது. ஆனால் பாஜகவோ 3 இடங்களை மட்டும் வென்றது. அது போல் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 62 இடங்களில் இக்கட்சி வென்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. ஆனால் பாஜகவோ வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றது.
பஞ்சாப் தேர்தல்:
டெல்லியை கைப்பற்றிய ஆம் ஆத்மி அடுத்து பஞ்சாபை கைப்பற்ற களம் இறங்கியது. 2022 இல் நடைபெற்ற பஞ்சாப் சட்டசபை தேர்தல் களமிறங்கிய ஆம் ஆத்மி, 117 தொகுதிகளில் 92 இடங்களை வென்று ஆட்சியில் இருந்த காங்கிரஸை தோற்கடித்து ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் 18 இடங்களிலும் பாஜக 2 இடங்களும் வென்றது. பஞ்சாபில் பாஜகவின் வீழ்ச்சிக்கு விவசாயிகளின் போராட்டமே காராணம் எனக்கூறப்பட்டது . ஆனால் விவசாயிகளுக்காக போராடிய காங்கிரஸ் படு தோவியை சந்தித்தது.

டெல்லி நகர்ப்புற தேர்தல்:
கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற்ற டெல்லி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் 15 ஆண்டுகளாக டெல்லியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாஜகவை தோற்க்கடித்து அங்கும் வெற்றி பெற்றது. டெல்லியில் மொத்தம் உள்ள 250 வார்டுகளில் 136 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பாஜக 104 இடங்களைக் கைப்பற்ற காங்கிரஸோ வெறும் 9 வார்டுகளை மட்டுமே வென்றது.
கடந்த 2017 டெல்லி நகர்ப்புற தேர்தலில் ஆம் ஆத்மி வெறும் 20 இடங்களை வென்றது குறிப்பிடதக்கது.

அசூர வளர்ச்சி:
2012 ஆம் ஆண்டு ஆரம்பித்த ஆம் ஆத்மியின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் காங்கிரஸின் வீழ்ச்சியே காரணம் எனவும் கூறப்படுகிறது. காங்கிரஸை தோற்கடித்து பாஜக வெற்றி பெற்று பல மாநிலங்களை கைப்பற்றியது. பாஜகவிற்கு மாற்று ஒரு கட்சியை மக்கள் தேடும் போது, தைரியமாக களம் கண்டது ஆம் ஆத்மி. ஆம் ஆத்மியின் நடவடிக்கைகளை மக்களை விரும்புவதால் ஆம் ஆத்மியின் வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது.

காங்கிரஸ் கோட்டை:
ஒரு காலத்தில் டெல்லி காங்கிரஸின் கோட்டையாக இருந்தது. முதல்மைச்சராக காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீட்சித் சுமார் 15 ஆண்டுகள் டெல்லியை ஆட்சி செய்தார். ஆனால் காங்கிரஸில் இருக்கும் உள்கட்சி பிரச்சினை காரணமாக அடுத்த தேர்தலில் ஷீலா வீழ்த்தப்பட்டார். இவருக்கு அடுத்து 7 ஆண்டுகளாக டெல்லியை ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. தற்போது ஒற்றை இலக்க இடங்களில் வெல்லவே போராடி வரும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. தற்போது ஆம் ஆத்மி போட்டியிடும் அனைத்து இடங்களிலும் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி பாஜக vs ஆம் ஆத்மி என்ற இடத்தை பெற்றுள்ளது. ஆம் ஆத்மியின் இந்த வளர்ச்சி காங்கிரஸுக்கு வீழ்ச்சியாக அமையும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.